டெல்லி: நாளை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் அச்சுறுத்தியுள்ளதால், பல வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஸ்டிரைக்கானது பத்து தொழில்சங்கள் சேர்ந்து நடத்தும் பாரத் பந்தின் ஒரு பகுதியாகும்.
வங்கி சேவைகள் பாதிக்கலாம்
வங்கி சேவைகளும் மற்றும் ஏடிஎம் சேவைகளும் பல்வேறு இடங்களில் பாதிக்கபடலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தொழில் சங்கங்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தொழில் சங்க உறுப்பினர்களை தங்களது வேலையிலிருந்து விலகியிருக்குமாறு கேட்டு கொண்டுள்ளன. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடலாம் என்றும், ஆக இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
போராட்டத்தில் கலந்து கொள்ள அறிக்கை
இது குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) வங்கிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தங்களது கடமைகளையும் செய்யக்கூடாது என்றும், மேலும் அவர்கள் அனைவரும் கட்டாயம் இந்த போராட்டத்தில் சேர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
எஸ்பிஐயில் பாதிப்பு குறைவு தான்
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி கடன் வழங்குனரான எஸ்பிஐ, வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் தொழில் சங்க ஊழியர்கள் குறைவு தான். ஆக வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் குறையாது. இதனால் எங்களது வங்கிச் சேவை பெரிதும் பாதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
என்ன சொல்கிறது பேங்க் ஆப் பரோடா?
எஸ்பிஐ ஒரு புறம் தங்களது சேவை அவ்வளவாக பாதிக்கப்படாது என்று கூறியுள்ள நிலையில், மறுபுறம் பேங்க் ஆப் பரோடா நாளை நடைபெறும் ஸ்டிரைக்கால் அதன் கிளைகள் மற்றும் அலுவலகங்களின் செயல்பாடு முடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் நெட் பேங்கிங் சேவைகள் இருப்பதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் தற்போது 24 மணி நேரமும் காலவரையற்ற முறையில் வங்கிகள் பணத்தை மாற்ற முடியும் என்பதால் பெரிதும் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது.
வங்கி சீர்திருத்தங்கள்
வங்கி சீர்திருத்தங்கள் வங்கி ஊழியர்கள் நாளை தொழில் சங்கங்களுக்கு ஆதாரவாக போராட்ட களத்தில் குதித்தாலும், வங்கி சீர்திருத்தங்களுக்காகவும் போராட போவதாக அறிவித்துள்ளனர். வங்கிகளின், மெகா இணைப்பு, சம்பள உயர்வு என பலவற்றை வலியுறுத்தியும் இந்த போராட்ட களத்தில் குதிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
யார் யார் இந்தக் ஸ்டிரைக்கில் கலந்து கொள்கிறார்கள்
மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தப்படும் என 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக ஏற்கனவே அறிவித்துள்ளன. மேலும் மத்திய அரசின் இந்த கொள்கைகளானது மக்களுக்கு எதிராக உள்ளது என்று ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, எச்எம்எஸ், டியுசிசி, எஸ்இடபிள்யூஏ, எல்பிஎப், யுடியுசி ஆகிய தொழிற்சங்கள் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
கூட்டாக அறிக்கை
இதுகுறித்து இந்த தொழிற்சங்கங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையின் படி, மத்திய தொழிலாளர் அமைச்சகம் கடந்த 2ம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உறுதி அளிக்க தவறியது என்றும். அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. இந்திய தொழிலாளர் மாநாடு கடந்த 2015ம் ஆண்டு ஜூலையிலிருந்து நடத்தப்படவில்லை. தொழிலாளர் சட்ட விதிமுறைகளும் திருப்தி அளிக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்படுகின்றன. என பலவற்றை வலியுறுத்தியுள்ளன.
இதற்கெல்லாம் எதிர்ப்பு
மேலும் 12 விமான நிலையங்கள் ஏற்கனவே தனியார்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் விற்க அரசு முடிவு செய்துள்ளது. பிபிசிஎல் நிறுவனத்தை விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் ஆகியவை இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு ஊழியர்கள் பல ஆயிரம் பேரை விஆர்எஸ் மூலம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
மேலும் ரயில்வே தனியார்மயமாக்கல், வங்கிகள் வலுக்கட்டாயமாக இணைக்கப்படுகின்றன. உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை தேசிய அளவில் வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது என்றும் தொழில் சங்கங்கள் கூறியுள்ளன. மேலும் இந்த ஸ்டிரைக்கில் சுமார் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளது.