இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு இந்திய வங்கிகள் தான் எனப் பல முறை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் இன்று வங்கியும் சரியாக இல்லை, ஊழியர்களும் சரியாக இல்லை.
ஆம், உண்மையில் தான். இந்திய வங்கிகள் தற்போது அதிகளவிலான வராக்கடன் பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறது. எப்போது எந்த வங்கி மூடப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்க மறுபுறம் வங்கி ஊழியர்கள் அங்கன்வாடி பிள்ளைகள் ஸ்கூல்-க்கு லீவ் போடுவது போல் அடிக்கடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்திய வங்கி ஊழியர்கள் தற்போது அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் ஒரு வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
பட்ஜெட் நாள்
2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிப்ரவரி 1ஆம் தேதியும், ஜனவரி 31ஆம் தேதியும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மார்ச் 11 முதல் 13 வரையில் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 14 மற்றும் 15ஆம் தேதி சனி மற்றும் ஞாயிறு என்பதால் அடுத்த 2 நாளும் வங்கி விடுமுறை.
இந்தப் போராட்டம் நடந்தால் சுமார் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் மக்கள் வங்கி சேவை இல்லாமல் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.
பேச்சுவார்த்தை
Bank Employees Federation of India (BEFI) மற்றும் All India Bank Employees' Association (AIBEA) ஆகிய அமைப்புகள் ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து Indian Banks' Association (IBA) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இப்பேச்சுவார்த்தை கடந்த முறை போலவே தோல்வியைச் சந்தித்த நிலையில் தற்போது 3 நாள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகள்
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி போராட்டத்தின் போது வங்கி ஊழியர்கள் கீழ் உள்ள கோரிக்கையை வைத்துப் போராட்டம் நடத்தினர். ஆனால் தற்போது அறிவித்துள்ள போராட்டம் சம்பள உயர்வை மையப்படுத்தி நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்படவே போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அனைத்து ஊழியர்களுக்கும் 12.25 சதவீத சம்பள உயர்வு, மத்திய அரசு கையில் எடுத்துள்ள வங்கி இணைப்புத் திட்டத்தில் வங்கி இணைக்கப்படும் போது அளிக்கப்படும் சிறப்புக் கொடுப்பனவு தொகையை அடிப்படை சம்பளத்தில் இணைப்பு மற்றும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் கட்டாயம் 5 நாள் வேலைநாள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
9 வங்கி ஊழியர்கள் அமைப்புகள்
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த போராட்டத்தில் All India Employees Association (AIBEA), All India Bank Officers Confederation (AIBOC), National Confederation of Bank Employees (NCBE), All India Bank Officers' Association (AIBOA), Bank Employees Federation of India (BEFI), Indian National Bank Employees Federation (INBEF), Indian National Bank Officers' Congress (INBOC), National Organisation Of Bank Workers (NOBW) National Organisation of Bank Officers (NOBO) ஆகிய அமைப்புகள் பங்கேற்றது.
இந்தப் போராட்டத்திலும் அணைத்து அமைப்புகளும் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் வங்கிகள்
இந்தப் போராட்டத்தில் பொதுத்துறை வங்கி சேவைகள் தான் அதிகளவில் பாதிக்கிறது. தனியார் வங்கிகள் பங்குபெறவில்லை, இதனால் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி போன்ற தனியார் வங்கிகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் முழுமையாக இயங்கும்.
புத்தாண்டு துவங்கி 2 மாதம் முடியவில்லை அதற்குள் 2 வேலை நிறுத்த போராட்டம், 3வது போராட்டத்திற்குத் திட்டம். பொதுத்துறை வங்கிகள் எங்குப்போய் முடியுமோ..!!