டெல்லி: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் தேதிகளில் வேலை நிறுத்தத்தினை தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் 13 அன்று மாதத்தின் 2-வது சனிக்கிழமையாகும். இதனையடுத்து மார்ச் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை நாளாகும்.
இதனை தொடந்து இன்றும் நாளையும் வங்கி விடுமுறை என்பதால், வங்கி சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் தனியார் வங்கிகள் வழக்கம்போல செயல்பட்டுக் கொண்டுள்ளன.
எதற்காக இந்த போராட்டம்?
மத்திய அரசு கூறியதுபோல பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால், வங்கி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலைக்கு தள்ளப்படலாம் என ஊழியர் சங்கங்கள் அஞ்சுகின்றன. இதனால் மத்திய அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையிலேயே வங்கி ஊழியர் சங்கங்கள் வங்கி போராட்டத்தினை கையிலெடுத்துள்ளன.
வங்கி சேவைகள் முடங்கலாம்
பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, கனரா வங்கி மற்றும் பேங்க் ஆப் மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில வங்கிகள், வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன. குறிப்பாக பணப்பரிவர்த்தனை, ஏடிஎம் சேவை, செக் கிளியரன்ஸ் சேவை, டெபாசிட்கள் என பல வங்கி சேவைகள் முடங்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
போராட்டத்தில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள்?
UFBU, AIBEA-ன் உறுப்பினர்கள், அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை அடங்கும். இவர்களோடு இந்திய தேசிய வங்கி ஊழியர் சம்மேளனம், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ், வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு ஆகியவை இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
வங்கிகள் எச்சரிக்கை
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆஃப் மஹராஷ்டிரா உள்ளிட்ட வங்கிகள் அதன் வாடிக்கையாளார்களுக்கு வங்கி சேவைகள் சற்று பாதிக்கப்படலாம் என்று அறிவித்துள்ளன. எனினும் வேலை நிறுத்தத்தின் தாக்கத்தினை குறைக்க வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளன. ஆக சாதாரணமாக வங்கி சேவைகளை அளிக்க முடியும் எனவும் வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தனியார் வங்கிகள் வழக்கம்போல செயல்படும்
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்கள் போராட்டத்தினை தொடங்கினாலும், தனியார் வங்கிகள் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டுள்ளன. இதனால் வங்கி சேவைகள் தனியார் வங்கிகளில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆக அவசர தேவைகளுக்கு தனியார் வங்கி ஏடிஎம் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.