ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வங்கி லாக்கர் விதிகளின் படி அனைத்து முன்னணி வங்கிகளும், அதன் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் ஒப்பந்தத்தை ஜனவரி 1-க்கு முன் வழங்கி புதுபித்து கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.
ஜனவரி 1 2023 -க்குள் அனைத்து லாக்கர் உரிமையாளர்களும் புதிய லாக்கர் ஏற்பாட்டிற்கான தகுதியை வெளிப்படுத்தி, ஜனவரி 1, 2023க்கு முன்னதாக புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அறிவித்துள்ளது. .
இது குறித்து கடந்த ஆகஸ்ட் 8, 2021ம் தேதியன்று திருத்தம் செய்யபப்ட்ட சில வழிகாட்டுதல்களை அறிவித்தது. இது ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது விதிகளை அமல்படுத்தி அதனை ஜனவரி 1 முதல் புதுப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.
இழப்பீடு
வாடிக்கையாளரின் பொருட்களில் வங்கி ஊழியர்களால் மோசடி நடந்தாலோ அல்லது தீ விபத்து, வங்கி கட்டடம் இடிந்து விழுந்து பாதுகாப்பு பெட்டகம் சேதமடைந்தாலும் இழப்பீடுகளை வழங்க வேண்டும். இந்த இழப்பீடானது ஓராண்டு வாடகையை போல 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு வங்கிகள் வழங்க வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
எந்த பொருட்களுக்கு அனுமதி இல்லை?
வங்கி லாக்கர்களில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது. என்பதை வாடிக்கையாளர் உடனான ஒப்பந்தப் பத்திரத்தில் வங்கிகள் சேர்க்க வேண்டும், இதன் மூலம் சட்டத்திற்கு புறம்பான பொருட்களை பாதுகாப்பாக வங்கிகளில் மறைத்து வைப்பது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
காலியான லாக்கர் கட்டணம்
வங்கிகள் கிளை வாரியாக காலியாக உள்ள லாக்கர் குறித்த விவரங்களை வெளிப்படையாக, அதனதன் இணைய பக்கத்தில் வெளியிட வேண்டும். லாக்கர் கிடைக்காத வாடிக்கையாளருக்கு காத்திருப்பு காலத்திற்கான பதிவு எண் வழங்க வேண்டும். வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும் என பல அறிவிப்புகள் வெளியானது.
எனினும் வங்கிகள் நில நடுக்கம், வெள்ளம், மின்னல், புயல் போன்ற இயற்கை சீற்றத்திலோ அல்லது வாடிக்கையாளரின் அலட்சியத்தினாலோ லாக்கரில் உள்ள பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு வங்கி பொறுப்பேற்காது என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
கட்டணம் செலுத்தவில்லை எனில்?
லாக்கர் வாடகைக்கு 3 ஆண்டுகள் டெர்ம் டெபாசிட்டினை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து 3 ஆண்டுகள் லாக்கர் வாடகை செலுத்த தவறினால், அந்த லாக்கரை உடைக்கவும் வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது.
செய்தி வெளியிடனும்
வங்கி இணைப்பு அல்லது வங்கி கிளை வேறு இடத்திற்கு மாற்றம், வங்கி கிளை மூடல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு நிகழ்வு இருந்தால், வங்கிகள் அதனை உள்ளூர் செய்தித்தாள் உள்பட, இரண்டு செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும். இது குறைந்தது இரு மாதங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட வேண்டும்.
சிசிடிவி முக்கியம்
வங்கிகள் லாக்கர்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 180 நாட்கள் வரையிலான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைத்திருப்பது மிக அவசியம்.
யாருக்கு லாக்கர்
புதிய வழிகாட்டுதல்களின் படி, வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள் லாக்கர் வசதிக்கு விண்ணப்பித்தவர்களின், சிடிடி விதிமுறைகளுடன் முழுமையாக இணங்குவோருக்கு லாக்கர் வசதியை வழங்கலாம். ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், வங்கிக்கு தொடர்பு இல்லாத பிற வாடிக்கையாளர்களுக்கும் லாக்கர் வசதியை வழங்கலாம்.