வங்கித் துறையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப, சில சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கவனமாக இருந்தால் மோசடிகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
சமீபத்திய காலமாகவே சைபர் கிரைம் பிரச்சனை என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுவாக இது போன்ற பிரச்சனைகள் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாலேயே பெரும்பாலும் நடக்கிறது.
எப்படியிருப்பினும் சில சமயங்களில் ஹேக்கர்கள் தங்கள் கைவரிசைகளை காட்டி விடுகின்றனர்.
விழிப்புணர்வு குறைவு
இந்தியா மட்டும் உலக நாடுகள் முழுவதுமே இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. எனினும் நம் மக்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வு என்பது குறைவாகவே இருந்து வருகின்றது.
இதற்கிடையில் தான் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரும் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அடிக்கடி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றது.
பான் அப்டேட் செய்யாவிடில்?
எஸ்பிஐ அக்கவுண்ட் ஹோல்டர்கள் தங்களது வங்கிக் கணக்கில் பான் கார்டினை அப்டேட் செய்ய கூறி வரும் மெசேஜ் ஆனது பரவி வருகின்றது. அதில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது பான் எண்ணை அப்டேட் செய்யாவிடில், எஸ்பிஐ யோனோ கணக்கானது முடக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது போலியான செய்தி
இதனை மறுத்துள்ள PIB, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிஐ பெயரில் பொய்யான போலி செய்தி வெளி வந்துள்ளது. அதில் வாடிக்கையாளர்களிடம் பான் எண் உடனடியாக அப்டேட் செய்ய கூறி செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.
வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகள் முடக்கப்படுவதை தவிர்க்க பான் நம்பரை கொடுத்து புதுபிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என எஸ்பிஐ பெயரில் செய்திகள் வெளியாகியுள்ளது. இது போலியான செய்தி.
புகார் கொடுங்கள்
மேலும் PIB -யின் ட்விட்டர் பக்கத்தில் மேற்கண்டது போல் வாடிக்கையாளர்களுக்கு எஸ் எம் எஸ் அல்லது இமெயில் வரும் பட்சத்தில், யாரும் அதற்கு பதிலளிக்க வேண்டாம். குறிப்பாக உங்களது பர்சனல் விவரங்களை பகிர வேண்டாம். அப்படி ஏதும் வந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இல்லையெனில் report.phishing@sbi.co.in என்ற மெயில் ஐடிக்கு புகார் அளிக்கலாம் என பகிர்ந்துள்ளது.
இப்படி கேட்க மாட்டோம்
எஸ்பிஐ ஒரு போதும் இதுப்போன்ற விவரங்களை மெசேஜ் மூலமாக கேட்காது என #PIB Fact check மூலம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற மெசேஜ்கள் வந்தால் வாடிக்கையாளர்கள் இதில் வரும் லிங்கினை கிளிக் செய்யாமல், கேட்கும் விவரங்களை கொடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனமாகும்.
தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்
எஸ்பிஐ வங்கி மட்டும் அல்ல, வேறு எந்த வங்கியாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் பொதுவாக இதுபோன்று வலம் வரும் செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம். அப்படி ஏதும் வரும் பட்சத்தில் அதில் 1% சந்தேகம் இருந்தால் கூட, நேரடியாக வங்கியை தொடர்பு கொண்டு தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது.
கவனமுடன் செயல்படுங்கள்
அதேபோல அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஒருபோதும் உங்களது ஓடிபி உள்ளிட்ட விவரங்களை பகிராதீர்கள். இதுவே உங்களுக்கு பின்னர் பெறும் பிரச்சனையாக மாறலாம். பொதுவாக வங்கி மோசடிகளில் நடக்கும் தவறுகள் பெரும்பாலும் இதுபோன்றே நடக்கின்றன. ஆக வங்கி வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடனும், கவனமுடனும் செயல்படுவது நல்லது.