மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜென் ஸீ இளைஞர்களை குறி வைத்து வங்கி சேவைகளை வழங்க வேண்டும் என பொதுத்துறை வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜென் ஸீ இளைஞர்கள் தான் எதிர்காலம் என்பதை கணக்கில் கொண்டு செயல்பட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகள் தங்களின் பாரம்பரியமான அரசு வங்கி என்ற பிம்பத்திலிருந்து விலகி, இளம் தலைமுறையினருக்கு ஏற்றவாறு நவீனமயமாக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டு கொண்டுள்ளார். வங்கி சேவைகள் இளம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிமையாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளின் மாநாட்டில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன், Banking for Youth என்ற பிரச்சார இயக்கம் தொடங்க போவதாக அறிவித்தார். 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களை இலக்காக கொண்டு, நாடு முழுவதும் அக்டோபர் 2 அதாவது காந்தி ஜெயந்தி அன்று தொடங்கி ஒரு மாத காலம் Banking for Youth (இளைஞர்களுக்கான வங்கிச் சேவை) என்ற சிறப்பு பிரச்சார இயக்கத்தை பொதுத்துறை வங்கிகள் தொடங்கும் என்றார்.
இந்த இயக்கமானது நிதி சேவைகள் துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என கூறிய நிர்மலா சீதாராமன், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களுடன் இணைந்து, இளைஞர்களுக்கு இலவச ஆன்லைன் படிப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வங்கிகள் வழங்க வேண்டும். மேலும், உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் மற்றும் மனநல தளங்களுக்கான வவுச்சர்கள் போன்ற வாழ்க்கை முறை சார்ந்த சலுகைகளையும் வங்கி சேவைகளுடன் இணைத்து வழங்கலாம் என யோசனை தெரிவித்தார்.
இளம் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்காமல், வங்கிகளே நேரடியாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களின் வளாகங்களுக்கு சென்று வங்கி கணக்கு தொடங்குவது, வவுச்சர்களை வழங்குவது போன்ற சேவைகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
வங்கி கிளைகளில் இளம் வாடிக்கையாளர்களுக்கு உதவியாக பிரத்யேகமான 'Yuva Kiosks அல்லது Yuva Banking Mitra என்ற சேவைகள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இளம் வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என யோசனை கூறினார்.
ஸ்மார்ட்போன்கள் உடனேயே வளர்ந்த இன்றைய இளம் தலைமுறையினர், வங்கி சேவைகள் மிகவும் எளிமையாகவும், தனிப்பயனாக்கப்பட்டதாகவும், 24 மணி நேரமும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எனவே, தனியார் வங்கிகளை போலவே பொதுத்துறை வங்கிகளும் தங்களின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த இயக்கத்தின் நோக்கம் வெறும் கணக்குகளை தொடங்குவது மட்டுமல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் மற்றும் முதலீடுகள் என இளைஞர்களின் வாழ்நாள் முழுவதும் நிலையான மற்றும் நீண்டகால வங்கி உறவை உருவாக்குவதே என நிதியமைச்சர் கூறினார்.இந்த புதிய முயற்சியின் மூலம், இந்தியாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் இளம் தலைமுறையினரை முறையான நிதி சேவைகளுக்குள் கொண்டுவர முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

