இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஒருவர் தொழில் தொடங்கி நடத்துவது அத்தனை எளிதான காரியம் இல்லை.
அதிலும் கடன் எல்லாம் வாங்கி தொழில் நடத்துவது கிட்டத்தட்ட இமாலய சாதனை தான். வங்கிகளிடம் கடனை வாங்கி, தன் தொழிலை எப்படியாவது லாபகரமாக மாற்றிவிட வேண்டும் என பல வியாபாரிகளும் கம்பெனிகளும் முயற்சிக்கிறார்கள்.
ஆனால் சிலருக்கு, தங்கள் வியாபாரத்தை, நினைத்தது போல் நடத்தி, வெற்றி பெற வைக்க முடிவதில்லை. கடன் வாங்கி வியாபாரத்தை நடத்தி, லாபம் பார்த்து கடனை திருப்பி அடைக்க முடியாத போது, திவாலாகிறார்கள்.
வங்கிகளும் Insolvency and Bankruptcy Code சட்டத்தைப் பயன்படுத்தி, கம்பெனி அல்லது வியாபாரத்தை முழுமையாக கைப்பற்றிவிடுவார்கள். கைப்பற்றிய கம்பெனி (அ) வியாபாரத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிடுவார்கள். சொத்துக்களை விற்று வரும் பணத்தை வங்கிகள் கொடுத்த கடன் மற்றும் அதற்கான வட்டியைக் கழித்துக் கொள்வார்கள். மீதி பணம் இருந்தால் கடன் வாங்கியவருக்கு கொடுப்பார்கள்.
அப்படி இந்தியவில் கடந்த 2019 - 20 நிதி ஆண்டில், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலாகி Insolvency and Bankruptcy Code வழியாக பஞ்சாயத்துக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 3,774 பேராம். அதாவது 3,774 வழக்குகள் வந்திருக்கிறது.
இது 2018 - 19 நிதி ஆண்டை விட இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறதாம். இதை Insolvency and Bankruptcy Board of India (IBBI) என்கிற அமைப்பே உறுதி செய்து இருக்கிறது. இந்த 3,774 வழக்குகளில் 1,604 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறதாம்.
கடந்த 3 வருடங்களில், Insolvency and Bankruptcy Code-ன் கீழ், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வந்த வழக்குகளில் 1,527 வழக்குகள் உற்பத்தி துறை சார்ந்ததாம். அதனைத் தொடர்ந்து 757 ரியல் எஸ்டேட் கம்பெனிகளும், 408 கட்டுமான கம்பெனிகளும், 378 சில்லறை வணிகம் மற்றும் மொத்த விலை டிரேடிங் கம்பெனிகளும் Insolvency and Bankruptcy Code-ன் கீழ் வழக்கு வந்திருக்கிறதாம்.
ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகள், இந்த Insolvency and Bankruptcy Code-ன் கீழ் அதிகம் பாதிக்கப்படவில்லை எனவும் தனியே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.