இந்திய வங்கிகளில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்திருப்பதாக தகவல் அறியும் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ், சவ்ரவ் பாந்தரே என்பவர் எழுப்பிய கேள்விக்கு, ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் இந்த மோசடிகள் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், நாடு முழுவதிலும் உள்ள 90 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில், கடன் மோசடி தொடர்பான 45,613 வழக்குகள் மார்ச் 31, 2021 வரையில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
எஸ்பிஐயில் மிகப்பெரிய மோசடி
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியும், மிகப்பெரிய கடன் வழங்குனருமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தான் மிக பெரிய அளவில் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வங்கியில் மட்டும் 78,072 கோடி ரூபாய் கடன் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி
எஸ்பிஐ தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 39,733 கோடி ரூபாயும், பேங்க் ஆப் இந்தியாவில் 32,224 கோடி ரூபாயும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 29,572 கோடி ரூபாயும் மோசடி நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேற்கண்ட டாப் 5 வங்கிகளில் மட்டும் 2,06,941 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தனியார் வங்கிகளிலும் கைவரிசை
இந்த மோசடியானது மொத்த வங்கி மோசடிகளில் 42.1% பங்களித்துள்ளது. இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், முன்னணி தனியார் வங்கிகளும் இதில் அடங்கும். குறிப்பாக ஐசிஐசிஐ வங்கியில் 5.3% மோசடியும், யெஸ் வங்கியில் 4.02% மோசடியும், ஆக்ஸிஸ் வங்கியில் 2.54% மோசடியும், மேற்கண்ட இந்த மூன்று வங்கிகள் மட்டும் மொத்த மோசடிகளில் 11.87% நடந்துள்ளது. இதே நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச் டி எஃப் சியில் 0.55% மோசடியும் நடந்துள்ளது.
தொடர்ந்து அதிகரிப்பு
ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின் படி, 2019 - 20ம் ஆண்டில் இந்திய வங்கித் துறையில் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் 159% அதிகரித்து, 1.86 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் 1 லட்சம் ரூபாய்க்கான மோசடிகள் 28% அதிகரித்து 8,707 ஆக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மோசடிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.