நவம்பர் 29ஆம் தேதி துவங்க இருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு வங்கியியல் விதிகள் மசோதா 2021 பெயரில் புதிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது.
இந்த மசோதாவில் மோடி தலைமையிலான மத்திய அரசு நீண்ட காலமாகத் திட்டமிட்டு இருந்த பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கல் திட்டத்தைச் செயல்படுத்த முக்கியமான திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது.
பொதுத்துறை வங்கிகள்
பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டதன் மூலம் வங்கிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு நிர்வாகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்கி தனியார்மயமாக்கல் குறித்து முக்கிய முடிவை இந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு எடுக்க உள்ளது.
புதிய மசோதா
மத்திய அரசு நவம்பர் 29ஆம் தேதி Banking Laws (Amendment) Bill, 2021 மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு இருப்பு அளவு 51 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகக் குறைப்பதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளது.
குளிர்காலக் கூட்டத்தொடர்
இது குளிர்காலக் கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறும் பட்சத்தில் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளிலும் மத்திய அரசு தனது பங்கு இருப்பைக் குறைக்க முடியும். இந்தப் பங்குகளை மத்திய அரசு பிற அரசு அமைப்பு, அரசு முதலீடுகள் அல்லது தனியார் நிறுவனங்களுக்குக் கூட விற்பனை செய்து முதலீட்டை ஈர்க்க முடியும்.
2 பொதுத்துறை வங்கிகள்
மேலும் பட்ஜெட் 2021-22 அறிவிப்பில் மத்திய அரசு 2 பொதுத்துறை வங்கிகளை முழுமையாகத் தனியார்மயமாக்க முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. எந்த வங்கியை தனியார் மயமாக்குவது என்பது குறித்து நித்தி அயோக் செய்த பரிந்துரையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்டரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றைக் குறிப்பிட்டு இருந்தது.
முக்கிய முடிவு
தற்போது மத்திய அரசு சமர்ப்பித்துள்ள Banking Laws (Amendment) Bill, 2021 மசோதாவில் அரசு பொதுத்துறை வங்கிகளில் வைத்திருக்கும் அதிகப்படியான பங்கு இருப்பு அளவை 51 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகக் குறைக்கப்படத் திட்டமிட்டு இருப்பதால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்டரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரு வங்கிகளை மேலும் தனியார்மயமாக்க வேண்டுமா என்ற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
ஏர் இந்தியா
மத்திய அரசு இதேபோலத் தான் ஏர் இந்தியா நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை வைத்திருக்க முடிவு செய்து அதன் பின் இதில் தோல்வி அடைந்த காரணத்தால் மொத்த ஏர் இந்தியாவையும் விற்பனை செய்துள்ளது.