வங்கிகள் நவம்பர் 5-ந் தேதிக்குள் கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை வழங்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் மக்களை பாடாய்படுத்தி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், மேற்கொண்டு பரவலைக் கட்டுப்படுத்த, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
இதனால் மக்கள் தங்களது வேலையினை இழந்து, பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர்.
கடன் தவணைக்கு கால அவகாசம்
இந்நிலையில் தான் அவர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக கடன் தவணைக்கு ஆறு மாத காலம் அவகாசம் அளிக்க ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அனுமதி கொடுத்தது. இதனடிப்படையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்தும் கடன் வாங்கியவர்களுக்கும் ஆறு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.
வட்டிக்கு வட்டி தள்ளுபடி
எனினும் கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும், இந்த காலத்திற்கு வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டும் என்றும் வங்கிகள் கோரின. ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்தது. அதைத் தொடர்ந்து, 2 கோடி ரூபாய் வரையில் கடன் வாங்கியவர்களுக்கு, கடந்த மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான 6 மாத காலத்துக்கு வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது.
விரைவில் நடைமுறைப்படுத்த உத்தரவு
ஆரம்பத்தில் அது முடியாது, இதனால் வங்கிகள் பாதிக்கபடக் கூடும் என்று கூறிய அரசு, பின்னர் சில ஆய்வுகளுக்கு பின்னர் ஒப்புக் கொண்டது. அதைத் தொடர்ந்து தான் இதனை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்பேரில், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு கடந்த அக்டோபர் 23ம் தேதி வெளியிட்டது.
மத்திய அரசு என்ன சொன்னது?
அதையடுத்து, கடன்தாரர்கள் செலுத்திய கூடுதல் வட்டித்தொகையை அவர்களுக்கு நவம்பர் 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதுடன், நவம்பர் மாதம் 5-ம் தேதிக்குள் கடன்தாரர்களின் கணக்குகளில், சலுகை திட்டத்தின் கீழ் கணக்கிடப்பட்ட தொகையை வரவு வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
ரிசர்வ் வங்கி அதிரடி
மத்திய அரசு அறிவித்தபடி, வங்கிகள் நவம்பர் 5-ம் தேதிக்குள் கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை வழங்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், " அனைத்து தொடக்க (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள், வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள், இந்த திட்ட விதிகளின்கீழ், தேவையான நடவடிக்கைகளை உரிய காலக்கெடுவுக்குள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இன்னும் சில தினங்களில் குட் நியூஸ்
மேலும் குறிப்பிட்ட கடன் கணக்குகளில் (மார்ச் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில்) கடன்தாரர்களுக்கு 6 மாத காலத்துக்கான கூட்டு வட்டி மற்றும் சாதாரண வட்டிக்கு இடையேயான வித்தியாசத்தை கருணைத்தொகையாக செலுத்துவதற்கு இந்த திட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகளும் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியோ இன்னும் சில தினங்களில் கடன்தாரர்களுக்கு குட் நியூஸ் உள்ளது.