பொதுத்துறை வங்கிகளில் நாளுக்கு நாள் வாராக் கடன் அதிகரித்து வரும் நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் பொதுத்துறை வங்கியின் சுமையைக் குறைக்கப் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் மிகவும் முக்கியமானது இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்கத் திட்டமிட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
வங்கி தனியார்மயமாக்கல்-ஐ எதிர்த்து இந்தியாவின் 9 வங்கி ஊழியர்கள் அமைப்புகளின் தலைமை அமைப்பான யுனைடெட் போரம் ஆ பேங்க் யூனியன்ஸ் (UFBU) அமைப்பு நாடு முழுவதும் இருக்கும் பொதுத்துறை வங்கிகளை 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முக்கியப் பட்ஜெட் அறிவிப்பு
பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்குச் சேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தில் 2020ல் மாபெரும் தோல்வியை மத்திய அரசு அடைந்த நிலையில், 2022ஆம் நிதியாண்டில் திட்டமிட்டபடி 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை அரசு பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள்
இந்த இலக்கை அடைய முதலும் முக்கியமாக இரண்டு பொதுத்துறை வங்கிகளையும், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யப் போவதாகப் பட்ஜெட் அறிக்கையிலேயே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு வங்கி பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு பெற்றாலும், வங்கி ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுகிறது.
2 நாள் போராட்டம்
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து United Forum of Bank Unions (UFBU) அமைப்பு நாடு முழுவதும் இருக்கும் பொதுத்துறை வங்கி ஊழியர்களை மார்ச் 15 மற்றும் 16ஆம் தேதி இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வங்கிகள் ஊழியர்கள் போராட்டத்தின் மூலம் மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்குமா..?
இந்திய வங்கித்துறை
இந்திய வங்கித்துறையை மேம்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக ஐடிபிஐ வங்கி பங்குகளை 2019ஆம் ஆண்டு எல்ஐசி-க்கு விற்பனை செய்தது. 14 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைத்தது.