இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியும், கடன் வழங்குனருமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களை ஆன்லைன் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டுள்ள மோசடியாளர்கள், வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ஆன்லைனில் நிலையான வைப்பு கணக்குகளை உருவாக்கியுள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது தனிபட்ட விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்குமாறும் எச்சரித்துள்ளது.
விவரங்களை பகிராதீர்கள்
குறிப்பாக ஓடிபி, பாஸ்வேர்டு, சிவிவி மற்றும் அட்டை எண் போன்ற ரகசிய விவரங்களைக் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. அதோடு வங்கி ஒரு போதும் மேற்கண்ட விவரங்களை போன் மூலமாகவும் அல்லது எஸ் எம் எஸ் மூலமாகவும், மெயில் மூலமாகவும் கேட்காது எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
எச்சரிக்கையாக இருங்கள்
இது குறித்த ட்விட்டர் பக்கத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். எங்கள் வங்கியை சேர்ந்தவர்கள் போல் காட்டிக் கொள்பவர்களின் வலையில் விழாதீர்கள். அவர்களிடம் பாஸ்வேர்டு/ஓடிபி/சிவிவி / கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை ஒரு போதும் கொடுக்காதீர்கள். மேற்கண்ட விவரங்களை ஒருபோதும் எஸ்பிஐ தொலைபேசியில் கேட்காது. எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என எச்சரித்துள்ளது.
சைபர் குற்றவாளிகள்
சைபர் குற்றவாளிகள் முதலில் தங்களுக்கு கிடைத்த விவரங்களைப் பயன்படுத்தி எஃப்டி கணக்கினை உருவாக்கி பாதிக்கப்பட்டவரின் கணக்கில் இருந்து பணத்தினை மாற்ற முயல்வார்கள். அதோடு நிற்காமல் தங்களை ஒரு வங்கி அதிகாரியாக காட்டிக் கொண்டு, ஓடிபியை பெற்றவுடன், வங்கிக் கணக்கில் உள்ள முழு தொகையையும் மாற்றிக் கொள்வார்கள்.
ஆன்லைனிலேயே எஃப்டி தொடங்கிக் கொள்ளலாம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலேயே எஃப்டியை தொடங்கிக் கொள்ளும் ஆப்சன் உண்டு. இதற்காக நீங்கள் உங்களது இணைய வங்கியினை லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதில் பிக்ஸட் டெபாசிட் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் e-TDR/e-STDR (FD) என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பிறகு proceed என்பதை கொடுக்கவும். மேற்கண்ட ஆப்சனில் TDR என்பது டெர்ம் டெபாசிட் ஆகும். இதே STDR ஸ்பெஷல் டெர்ம் டெபாசிட் ஆகும். ஆக நீங்கள் செய்ய நினைக்கும் எஃப்டியை தேர்வு செய்து proceed என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்திருந்தால், அதில் எதில் இருந்து பணம் டெபிட் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு எவ்வளவு ஆரம்ப தொகை என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். அது எவ்வளவு காலம், வருடம், அல்லது மாதம் என மற்ற விவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
இதன் பிறகு உங்களது டெபாசிட்டுகளுக்கான முதிர்வு வழிமுறையை தேர்வு செய்ய வேண்டும்.
இதன் பின்னர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கிளிக் செய்து, பின்னர் சப்மிட் கொடுக்கவும். அதன் பிறகு உங்கள் எஃப்டி விவரங்கள் திரையில் தோன்றும். அதன் பின்னர் ஓகே என்பதை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications