ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எந்த அளவுக்கு இதன் நன்மை இருக்கிறதோ? அதே அளவு தீமையும் உள்ளது. இதிலிருந்து எப்படி நம்மை நாம் பாதுகாத்து கொள்வது என்பது தான் இந்த கட்டுரையின் நோக்கமே.
அதிலும் இன்றைய காலகட்டத்தில் Sim Swap scam என்ற, மொபைலில் பயன்படுத்தும் சிம் கார்டை போலியாக தயாரித்து அதன் மூலம், உங்கள் வங்கி கணக்கில் இருந்து திருடுவது என பல திருட்டுகள் நடக்கின்றன.
இதிலிருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது. இதைப் பற்றி எப்படி அறிந்து கொள்வது என்பதை பற்றி வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு
eMarketer என்ற மதிப்பீட்டு நிறுவனம் கடந்த 2014ல் 581 மில்லியன் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் இருந்ததாகவும், இது 2019ல் 800 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் 2017ம் ஆண்டு அறிக்கையின் படி சுமார் 299.24 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும், இது வரும் 2020ல் 401.74 மில்லியனாகவும், இது 2022ல் 442.5 மில்லியனாகவும் அதிகரிக்கலாம் என்றும் ஒர் அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கிலிருந்து பணம் அபகரிப்பு
மொபைல் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வரும் இதே வேலையில், இதன் வாயிலாக நடைபெறும் சைபர் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உதாரணத்திற்கு கடந்த ஜூன் மாதத்தில் ஒரு சீனியர் சிட்டிசன் ஒருவர், தனது வங்கி கணக்கில் இருந்து, போலியான சிம்மை உருவாக்கி அதன் மூலம் 25 லட்சம் ரூபாயை ஆட்டையை போட்டுள்ளனர்.
வங்கி கணக்குகளில் நம்பரை மாற்றலாம்
சரி எப்படி? சிம்மை வைத்து வங்கியில் இருக்கும் பணத்தை திருட முடியும் என்று கேட்கிறீர்களா? இன்று நம்மில் சிலர் செய்யும் தவறும் இது தான். வங்கிகளில் கொடுத்திருக்கும் மொபைல் நம்பரை பல வருடங்களுக்கு உபயோகிக்காமல் ஏதேனும் ஆஃபர் வந்தால், அதை தூக்கி போட்டு விட்டு அடுத்த நம்பருக்கு போய்விடுகிறோம். ஆனால் வங்கி கணக்குகளில் கொடுத்ததை மறந்து விடுகிறோம்.
போலியான சிம் மூலம் பரிவர்த்தனை
ஆனால் நம் வங்கியில் கொடுத்த மொபைல் நம்பரை போலியாக வாங்கிக் கொண்டு, அதை வைத்து புதியதாக ஏடிஎம் கார்டுகள் வாங்குதல், நமது நெட் பேங்கிங் பாஸ் வேர்டை மாற்றுதல், மேலும் கூகுள் பே, பேடிஎம், அமேசான் பே, போன் பே, என பல பண பரிவர்த்தனைகளில் உபயோகப்படுத்தினாலும் அவற்றை, அப்படியே மொபைல் எண்ணை வைத்து பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ள முடியும்.
பணம் கொடுத்து மொபைல் எண்கள் விற்பனை
இதெல்லாவற்றையும் விட அதிர்ச்சிகரமான செய்தி என்னவெனில், இந்த மோசடி செய்யும் கும்பல் நமது மொபைல் எண்களை மொத்தமாக பணம் கொடுத்து பெற்றுக் கொள்கிறார்கள். அதன் மூலம் எந்த எண் எல்லாம் மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் வேறு என்ன பணபரிவர்த்தனைக்கு இந்த எண் உபயோகப்பட்டிருக்கிறது. இதை பயன்படுத்தி எப்படி பணம் பறிக்கலாம் என்றும் திட்டம் தீட்டுகின்றன. முதலில் நீண்ட காலமாக ஆப்ரேட் செய்யப்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளைத் தான் முதலில் தேர்வு செய்கின்றனர்.
வங்கியை அணுகி மொபைல் நம்பரை மாற்றுதல்
மேலும் போலியான மொபைல் நம்பரை தயாரித்தோ, அல்லது வங்கியை நேரடியாக அணுகி எங்களது வங்கி கணக்கில் கொடுத்திருக்கும் மொபைல் எண் தொலைந்து விட்டது என கூறி, வேறு நம்பரை மாற்றுகிறார்கள். இதன் மூலம் அனைத்து பரிவர்த்தனையும் செய்யும் போது புதிய எண்ணிற்கு தான் எஸ்.எம்.எஸ் செல்லும். இதனால் நமக்கும் தெரியாது அல்லவா. நாம் எப்போது வங்கியை அணுகுகிறோமோ அப்போது தான் தெரிய வரும் இந்த திருட்டு. அதற்குள் திருடன் தப்பி நாடு கடந்து பறந்திருப்பான்.
வார இறுதியை தேர்ந்தெடுக்கும் திருடர்கள்
இப்படி ஒரு திருட்டு எனில் மறுபுறம், போலியாக சிம்மையே உருவாக்கி திருடப்படுகிறது. மேலும் இவ்வாறு நடக்கும் பெரும்பான்மையான திருட்டுகள், வார இறுதி நாட்களில் தான் நடைபெறுவதாகவும், ஏனெனில் அந்த நாட்களில் வங்கிகள் விடுமுறை என்பதால், அன்று யாரையும் அணுக முடியாது அல்லவா? மேலும் தேவையில்லாத மெயில் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக கூட உங்களை ஹேக் செய்ய முடியும்.
கவனமாக இருங்கள்
ஆக உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட், சிவிவி நம்பர், காலவதி ஆகும் தேதி இவற்றில் மிக கவனமாக இருக்க வேண்டும். வெளியிடங்களில் இதை உபயோகிக்கும் போது கவனமாக கையாள வேண்டும். இதை வேறு யாரிடத்திலும் பகிரக்கூடாது. இன்றைய நிலையில் மொபைல் எண்கள் என்பது ஒரு அத்தியாவசிய தேவை ஆகி விட்ட நிலையில், ஒரு மொபைல் பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்கவேண்டும். மேலும் நீங்கள் செய்யும் அனைத்து பரிவர்த்தனைகளும், சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது கவனத்தில் எடுத்துக் கொண்டு வங்கியை அணுகலாம்.
சிம் ஸ்வாப் ஸ்கேம் மூலம் திருட்டு அதிகரிப்பு
உங்களது கணக்கில் இருந்து 10 ரூபாய் திருடப்பட்டாலும், அதே போன்று நூறு கணக்கில் திருடப்பட்டால், அது பெரிய தொகையாகும்.அதிலும் பெரு நகரங்களில் அதிகரித்தும் வரும் கொள்ளைகள், இது போன்ற கள்ளத்தனமான சிம் ஸ்வாப் ஸ்கேம் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது. ஒரு வேளை நீங்கள் பயன்படுத்திய நம்பரை பயன்படுத்த தவறிவிட்டால் உடனே வங்கிகளிலும் மாற்றி விட வேண்டும்.
எந்த நேரத்தில் எது எப்படி வேண்டுமானலும் நடக்கலாம். ஆக நாம் நமது பண பரிவர்த்தனைகளில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.