பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கேட்பரீஸ் சாக்லேட் வாங்கிய நிலையில் அந்த சாக்லேட்டில் புழுக்கள் இருந்ததால் வழக்கு தொடர்ந்தார். ஆறு ஆண்டுகள் கழித்து அவருக்கு கிடைத்த தீர்ப்பு என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
பெங்களூரை சேர்ந்த முகேஷ் குமார் கேடிலா என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு தனது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு 89 ரூபாய் கொடுத்து இரண்டு கேட்பரீஸ் சாக்லேட் வாங்கினார். அந்த சாக்லேட்டை அவர் வீட்டுக்குச் சென்று பிரித்து பார்த்தபோது அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து அவர் கேட்பரீஸ் நிறுவனத்திற்கு இது குறித்து புகார் அளித்தார். இந்த புகாரில் அவர் புழுக்கள் இருந்த சாக்லேட்டின் புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார். ஆனால் அவருக்கு கேட்பரீஸ் நிறுவனத்திடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
சாக்லேட்டில் புழுக்கள்
இதனை அடுத்து கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி பெங்களூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கேட்பரீஸ் சாக்லேட் உற்பத்தியாளர் மற்றும் சாக்லேட்டை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
6 ஆண்டு வழக்கு
இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சாக்லேட் நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மனுதாரர் 89 ரூபாய் செலவு செய்துவிட்டு 50 லட்சம் வரை நஷ்ட ஈடு கேட்பதில் இருந்து, அவர் முழுக்க முழுக்க பணத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார் என்று வாதம் செய்தார்.
ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு
இந்த நிலையில் சாக்லேட்டில் புழுக்கள் இருந்ததை நீதிமன்றம் ஒப்புக்கொண்டாலும், ரூ.50 லட்சம் வரை மனுதாரர் நஷ்ட ஈடு கேட்பதால், இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும், எனவே ஒரு கோடி ரூபாய் வரையிலான நஷ்ட ஈடு வழக்குகளை விசாரிக்கும் மாநில நுகர்வோர் நீதிமன்றங்களை மனுதாரர் அணுகலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
பரபரப்பு தீர்ப்பு
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முகேஷ் குமார் கேடிலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications