இந்தியாவின் ஐடி தலைநகரமாக கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு செயல்படுகிறது. பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் பெங்களூருவில் தான் அமைந்திருக்கின்றன. இங்கு 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தொடர்ச்சியாக செயல்பட்டு வந்த வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலேயே அதிக அளவு மின்சார தேவை கொண்ட அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தக் கூடிய ஒரு நகரமாக பெங்களூரு திகழ்கிறது. கர்நாடகாவில் மட்டும் இந்த மாதத்தில் 373.6 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமான மின்சாரம் பெங்களூருவில் தான் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது.

இதற்கு முக்கிய காரணம் பெங்களூருவில் செயல்படக்கூடிய அலுவலகங்கள் , மால்கள் மற்றும் குடியிருப்புகள். இங்கே 24 மணி நேரமும் ஏசி தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெங்களூரில் மார்ச், ஏப்ரல் உள்ளிட்ட மாதங்களில் ஏசி பயன்பாடு அதிகரிக்கும் அதற்கு ஏற்ப மின்சார தேவையும் அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஈரான் போர் காரணமாக எல்பிஜி கிடைக்காமல் உணவகங்கள் மற்றும் வீடுகளிலும் கூட ஏராளமானவர்கள் எலக்ட்ரிக் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் மின்சார தேவை வழக்கத்தை விட அதிகரித்திருக்கிறது.
ஒருபுறம் வெயில் காரணமாக நகரின் அனைத்து அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் ஏசி பயன்படுத்தப்படுகிறது, அதே வேளையில் வேளாண்மைக்காக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தற்போது நீர் பாசனத்திற்கு இடைவிடாமல் பம்புகளை பயன்படுத்துகின்றனர். எனவே இந்த இரண்டுமே மார்ச் மாதத்தில் மின்சார தேவையை அதிகரிக்க வைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மின்சார தேவை அதிகமாக இருப்பதாக் மின் உற்பத்தி நிலையங்கள் 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. அது தவிர சோலார் மின் உற்பத்தி முறையிலும் மின்சார பயன்பாடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர பஞ்சாப், ஹரியானா , உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கர்நாடக மாநில அரசு மின்சாரத்தை கொள்முதல் செய்ய தொடங்கியிருக்கிறது.
முன்னதாக எல்பிஜி அடிப்படையில் மின்சாரம் தயாரித்து வந்த எலகங்கா கேஸ் பவர் பிளான்ட் அதாவது மின் உற்பத்தி நிலையம் எல்பிஜி கிடைக்காமல் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த மின் உற்பத்தி நிலையத்தில் 370 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுவிட்டது. இங்கே மின் உற்பத்திக்கு தேவையான கேஸ் சப்ளை நிறுத்தப்பட்டிருப்பது இதற்கு காரணம் என கர்நாடகா மின் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே சிக்கலான ஒரு தருணத்தை சமாளிக்க அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறதாம். பெங்களூருவில் மின்சாரம் தடைபட்டால் ஐடி நிறுவனங்கள் செயல்பட முடியாத சூழல் உண்டாகும். இது மாநிலத்தின் பொருளாதாரத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே மின்வெட்டு என்ற நிலைக்கு செல்லாத வகையில் மாற்று ஆதாரங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறதாம்.


Click it and Unblock the Notifications