சமீபத்தில் பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக அந்நகரமே வெள்ளத்தில் மூழ்கியது என்பது தெரிந்ததே.
இந்த வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியது மட்டுமின்றி கார் மற்றும் இரு சக்கர வாகனங்களும் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய கார்களை சரிப்படுத்த தற்போது அனைவரும் முயற்சி செய்து வரும் நிலையில் இன்சூரன்ஸ் க்ளைம் செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
கார் காப்பீடு பாலிசி
இடைவிடாத மழை மற்றும் அதன் விளைவாக பெங்களூரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல கார்கள் பழுதடைந்துள்ளன. இந்த கார்களில் ஒன்றை வைத்திருப்பவர்களில் நீங்களும் இருந்தால், வெள்ளத்திற்குப் பிந்தைய பழுதுபார்க்கும் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டும். இருப்பினும், உங்களிடம் ஒரு விரிவான கார் காப்பீடு பாலிசி இருந்தால், பழுதுபார்க்கும் கட்டணத்தை செலுத்த உங்கள் காப்பீட்டாளரை தொடர்பு கொள்ளலாம்.
கார் இன்ஜின் சேதம்
ஒரு விரிவான கார் காப்பீடு என்பது வெள்ளம், சூறாவளி மற்றும் கனமழை போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை உள்ளடக்கும். எந்தவொரு காருக்கும் வெள்ளத்தால் ஏற்படும் இரண்டு வகையான சேதங்கள் உள்ளன. ஒன்று காரின் இயந்திர சேதம், இரண்டாவது கார் பாகங்கள் சேதம். பொதுவாக, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இன்ஜின் மற்றும் அப்ஹோல்ஸ்டரி சேதம் இரண்டையும் உள்ளடக்கும். ஆனால் இந்த பாலிசி கொஞ்சம் அதிக தொகையை கொண்டது. இந்த நிலையில் வெள்ளத்தால் சேதமடைந்த கார்களுக்கான உரிமைகோரலை பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
காப்பீட்டாளரின் கட்டணமில்லா அல்லது லேண்ட்லைன் எண்ணில் அவர்களை அழைத்து உங்கள் காரின் சேதம் குறித்து முதலில் அவர்களுக்குத் தெரிவிக்கவும். காப்பீட்டாளரின் இணையதளம் அல்லது செயலியிலும் தெரிவிக்கலாம். இதன்பின் வாடிக்கையாளருக்கு PDF அடங்கிய மின்னஞ்சல் கிடைக்கக்கூடும்.
துல்லிய விவரங்கள்
கனமழை மற்றும் வெள்ளத்தின்போது கார் எங்கு நிறுத்தப்பட்டது என்பது உள்பட அனைத்து விவரங்களையும் துல்லியமாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்தால் உங்களுக்கு உரிமைகோரல் பதிவு எண் வழங்கப்படும்.
பிக்-அப் நேரம்
இதனையடுத்து கார் இன்சூரன்ஸ் நிறுவனம் பிக்-அப் நேரத்தை திட்டமிடும். உங்கள் காரை கேரேஜுக்கு எடுத்து சென்று தொழில்நுட்ப வல்லுனர்களால் ஆய்வு செய்யப்படும். வாகனச் சோதனையின் போது உங்கள் கார் வெள்ளத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருந்தால் அதனை நீங்கள் பகிரலாம். காரின் சேத அளவை ஆய்வு செய்த பிறகு, க்ளைம் தொகை உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
கட்டணம்
உங்கள் கார் ஒரு சிறந்த மெக்கானிக் மூலம் பழுது பார்க்கப்பட்டு அதற்கான கட்டணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்திவிடும். இதனையடுத்து உங்கள் கார் மீண்டும் சாலையில் செல்ல தயாராகிவிடும்.