எல்லோரும் வீக்கென்ட்-ல ஹோட்டல்களில் சாப்பிடுவதும், ஹோட்டல்களில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும் வழக்கம். அப்படிப் பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பீட்சா ஆர்டர் செய்தவரிடம் 95,000 ரூபாய் பணத்தை ஒரு மோசடி கும்பல் அவரை ஏமாற்றி நூதன முறையில் திருடியுள்ளது.
பெங்களூரில் மையப் பகுதிகளில் முக்கியமான இடங்களில் ஒன்றான கோரமங்களாவை சேர்ந்த NV ஷேக் என்பவர் டிசம்பர் 1ஆம் தேதி 1.30 மணிக்குத் தனது சோமேட்டோ செயலியில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்து 1 மணிநேரம் மேல் ஆகியும் பீட்சா வராத நிலையில் ஷேக் சோமேட்டோ கஸ்டமர் கேர் எண்ணைத் தொடர்பு கொண்டு உள்ளார்.
கஸ்டமர் கேர்-ஐ தொடர்பு கொண்ட ஷேக், அந்த உணவகம் அவரது ஆர்டர் பெறவில்லை, இதனால் பணத்தைத் திருப்பிச் செலுத்துகிறோம் என்று எதிர்த்தரப்பில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அழைப்பு முடிந்த உடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும், அதில் ஒரு இணைப்பும் இருக்கும். அதைக் கிளிக் செய்த உடன் பணம் திரும்ப அனுப்புவதற்கான பணிகள் துவங்கிவிடும் என ஷேக்-யிடம் இந்தப் போலி கஸ்டமர் கேர் ஆசாமிகள் தெரிவித்துள்ளனர்.
ஷேக் மொபைல் எண்ணுக்கு வந்த மெசேஜ் இணைப்பை கிளிக் செய்த உடன் தான் மோசடி வலையில் சிக்கியது தெரிய வந்துள்ளது. இணைப்பை கிளிக் செய்த சில நிமிடத்தில் ஷேக்-இன் ஒரு வங்கி கணக்கில் இருந்து 45,000 ரூபாயும், மற்றொரு வங்கி கணக்கில் இருந்து 50,000 ரூபாய் திருடப்பட்டு உள்ளது. மொத்தம் 95,000 ரூபாய்.
இதுகுறித்து மடிவாலா காவல் நிலையில் புகார் அளித்த ஷேக், தான் அந்தப் பணத்தைத் தனது அம்மாவின் கேன்சர் மருத்துவச் செலவிற்காக வைத்திருந்தாகத் தெரிவித்துள்ளார். வழக்கைப் பதிவு செய்துள்ள காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
பொதுவாகவே சோமேட்டோ-விடம் கஸ்டமர் கேர் நம்பர் இல்லை, அனைத்து குறுஞ்செய்தி வாயிலாகத் தான் பேசி வருகிறது. இதைப் பல முறை பொதுவெளியிலும் சோமேட்டோ தெரிவித்துள்ளது.
உணவு தாமதம் ஆனாலும், கேன்சல் செய்யப்பட்டாலும் அனைத்தும் மெசேஜ் வாயிலாகத் தான் அனைத்து கருத்து பரிமாற்றமும் செய்யபடுகிறது எனச் சோமேட்டோ தெரிவித்துள்ளது. ஆனால் கூகிள் தேடுதளத்தில் சோமேட்டோ கஸ்டமர் கேர் எண் என யாரேனும் தேடினால் இப்படிப் போலியான எண் வர அதிகளவிலான வாய்ப்புகள் உண்டு.
இதேபோல் சில வாரங்களுக்கு முன் UPI பே மோசடி பெயரில் பெங்களூரை சேர்ந்த ஒருவரிடம் 85,000 ரூபாய் பணம் இணைய மோசடி செய்யப்பட்டு உள்ளது. இப்படிச் சுத்தி சுத்தி பல சைபர் குற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில் மிகவும் கவனமாக இருப்பது நம்முடைய கடமை.