பெங்களூரு: பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் மெட்ரோ ரயில் சேவைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பெங்களூரில் விமான நிலைய மெட்ரோ ரயில் பாதையில் கட்டப்படுவதாக இருந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கான திட்டங்களை கைவிடுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூருவின் விமான நிலையத்திற்கான மெட்ரோ ரயில் பாதை , நகரின் மத்திய பகுதியிலிருந்து கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மெட்ரோ விமான நிலைய பாதையில் கூடுதலாக இரண்டு ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் இது மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் என்னும் சொல்லப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்த இரண்டு ரயில் நிலையங்கள் அமைகிறது என்ற அறிவிப்பை அடுத்து அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் சொத்துக்களின் விலை மற்றும் வீடுகளின் வாடகைகள் உயர்ந்தன.
இதனிடையே பெங்களூரு மெட்ரோ ரயில் கழக லிமிடெட் தங்களுடைய திட்டங்களை மாற்றி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி பெட்டாகலாசூர் மற்றும் சிக்காஜலா ஆகிய இரண்டு இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தற்போது கைவிடுவதாக தெரிவித்துள்ளது.
இதற்கு நிதி பற்றாக்குறையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில் நிலையங்களையும் கட்டுவதற்கு 270 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. குறிப்பாக பெட்டாகலாசூர் ரயில் நிலையத்திற்கு மட்டும் 130 கோடி தேவைப்படுகிறது.
இந்த ரயில் நிலையங்களுக்கு மாநில அரசு சார்பில் நிதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த நிதியை பெற முடியவில்லை என பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறுகிறது.
முன்னதாக மத்திய அரசு இந்த பகுதியில் மெட்ரோ சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த போது இந்த இரண்டு ரயில் நிலையங்கள் அதில் சேர்க்கப்படவில்லை. எனவே மாநில அரசுதான் இந்த இரண்டிற்கும் நிதி வழங்கும் என சொல்லப்பட்டது.
ஆனால் மாநில அரசு ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்கு சுமார் 50,000 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டிய இருப்பதால் இந்தத் திட்டங்களுக்கான நிதியை வழங்க முடியாத சூழலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகளின் ஒரு பகுதியாக தற்போது பெங்களூரு மெட்ரோவின் விமான நிலைய பாதை 36.44 கிலோமீட்டர் தொலைவிற்கு நீட்டிக்கப்படுகிறது 17 ரயில் நிலையங்கள் இதில் அமைகின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications