இந்தியாவில் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் மக்கள் வருகைக்கு ஏற்ப போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பெரும் சிக்கலாக உள்ளது. இதனால் சாலைகளிலும் , தெருக்களிலும் ஓரங்களில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். இவ்வாறு சாலையோரங்களில் காரை நிறுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
பெங்களூரு நகரில் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தும் வகையில் Greater Bengaluru Area (Parking) Rules, 2026 என்ற புதிய வரைவு கொள்கையை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குடியிருப்புகள் மற்றும் பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்த அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

குடியிருப்பு பகுதிகளுக்கான ஆண்டு வாகன நிறுத்த கட்டணம் (Residential Parking Permit) வாகனங்களின் வகையை பொறுத்து ஆண்டுக்கு 15,000 முதல் 25,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிறிய கார்களுக்கு 15,000 ரூபாய், செடான் கார்களுக்கு 20,000 ரூபாய், எஸ்யூவி கார்களுக்கு 25,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம் ஒவ்வொரு மணிநேர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாலையின் வகையை பொறுத்து இந்த கட்டணங்கள் மாறுபடும். கார்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 40 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாலைகளில் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்துவதை குறைக்கும் வகையில், இரண்டு மணி நேரத்திற்கு மேல் வாகனங்களை நிறுத்தினால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என அந்த வரைவு அறிக்கையில் அரசு அறிவித்துள்ளது. சாலைகளுக்கு வெளியே உள்ள வாகன நிறுத்தங்களில் கட்டணம் சற்று குறைவாக இருக்கும். அங்கு கார்களுக்கு மணிநேரத்திற்கு 20 முதல் 40 ரூபாய் வரையிலும், இருசக்கர வாகனங்களுக்கு 10 முதல் 20 ரூபாய் வரையிலும் செலுத்தலாம்.
சாலைகளுக்கு வெளியே உள்ள நிறுத்தங்களில் மாதாந்திர கட்டணம் 1,000 முதல் 4,000 ரூபாய் வரை இருக்கும். இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை வாகனங்களை நிறுத்தினால், மாதாந்திரக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரின் நெரிசலை குறைக்கவும், பொது சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை ஒழுங்கமைக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் நிறுத்துவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
கர்நாடக அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை, இது குறித்த வரைவு அறிவிக்கையை ஆகஸ்ட் 11, 2026 அன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வரைவு விதிகள் குறித்து தங்களது ஆட்சேபனைகள் அல்லது ஆலோசனைகளை, 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

