பெங்களூரில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது என்றும் இதனால் ஐடி நிறுவனங்களுக்கு ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஐடி நிறுவனங்களின் சங்கம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வந்ததாகவும் இதனால் ரூ.225 கோடி, ஐடி நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரில் கனமழை
பெங்களூரில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது என்பதும் பல சாலைகள் மழை நீரில் மூழ்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீடுகளிலிருந்து அலுவலகத்திற்கு வருவதற்கு மிகுந்த சிரமப்பட்டனர்.
ORR சாலை
குறிப்பாக பெங்களூரில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்கள் இருக்கும் ORR சாலையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஊழியர்கள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக அலுவலகம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூரில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்களுக்கு ரூபாய் 225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள் கட்டமைப்பு
ORR சாலையில் உள்ள உள்கட்டமைப்பு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அதனால் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும் வளர்ச்சி அடைந்து வரும் பெங்களூருவின் உள்கட்டமைப்பு திறன் குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த பகுதியில் கணிசமாக முதலீடு செய்த நிறுவனங்களின் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார சேதம்
பெங்களூர் நகரம் மற்றும் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கள் ஏற்படாத வகையிலும், ஐடி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருளாதார சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள்
கடந்த 3 நாட்களாக பெய்த மழையின் காரணமாக இந்த நிலை தொடர்கிறது என்றும் இதனால் முடக்கப்பட்டுள்ள கட்டுமான திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துரிதப்படுத்த வேண்டும்
புதிய மெட்ரோ கட்டுமானப்பணி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் அது மிகவும் மெதுவாக நடந்து வருகிறது என்றும் பெங்களூரில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சாலை மேம்பாட்டு திட்டங்கள் முடிக்கப்படாமல் இருக்கிறது என்றும், இதனால் பெங்களூரிலுள்ள சாலை கட்டுமான பணிகளை மேம்படுத்துவதற்கு அரசு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐடி நிறுவனங்களின் சங்கம் கடிதம் மூலம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களுக்கு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications