வேலை செய்யும் இடத்திலும் சரி, சொந்தமாக தொழில் புரியும் இடங்களிலும் சரி பலரும் இரவு பகல் பாராமல் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் கூட வேலை செய்வதை பார்க்கிறோம். ஆனால் இப்படி கடினமாக உழைக்கும் பலரும் தங்களின் உடல்நலனை கவனிக்க தவறுகின்றனர். அப்படி ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர் தனக்கு நேர்ந்த நிலையை லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை நிறுவனரான சிவராம் பிரியாஸ் தான் நீண்ட நேரம் வேலை பார்த்தது மற்றும் வார இறுதி நாட்களிலும் உழைத்ததன் காரணமாக தனது ஆரோக்கியத்தை இழந்து, 4 மாதங்கள் ஐசியூவில் சிகிச்சை பெற்றதாக பகிர்ந்துள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

MillD Protein Atta என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இணை நிறுவனரான சிவராம் பிரியாஸ், இதற்கு முன்பு 2014இல் Briyas Tofu என்ற நிறுவனத்தையும் தொடங்கியவர். இவர் கடுமையான உழைப்புக்கு பெயர் போனவர். தனது தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை கூட திங்கட்கிழமையாக கருதி வேலை செய்வாராம். அதாவது வார இறுதி நாட்களிலும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து வேலை பார்த்துள்ளார்.
தான் குடும்பத்தினருடன் இருந்தாலும், தனது எண்ணம் முழுவதிலும் அலுவலக பணிகளே ஓடிக்கொண்டிருக்கும் என கூறுகிறார். ஃபேக்டரிக்கு வெறும் 10 நிமிட விசிட் என சொல்லிவிட்டுச் சென்று 3 மணி நேரம் அங்கே செலவிட்டதாகவும், போன் கால்களுக்கு தொடர்ந்து பதிலளித்து கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். எப்போதும் தொழில் பற்றியே சிந்தித்து கொண்டிருந்ததாக கூறும் அவர், தொடர்ச்சியான உழைப்பும், மன அழுத்தமும் அவரது உடல் நலனை முற்றிலுமாக பாதித்ததாக தெரிவிக்கிறார்.
இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்றாராம். நேரத்திற்கு உணவு உண்ணாமல் எப்போதும் பணி அழுத்தத்தில் இருந்ததே இந்த நிலைக்கு காரணமாகிவிட்டதாம்.
எப்போதும் வேலை வேலை.. தொழில்.. தொழில் என சுற்றி கொண்டிருப்பதை ஒரு பெருமையாக நான் கருதினேன் ஆனால் ஐசியூவில் இருந்த 4 மாதங்கள் எனக்கு பல விஷயங்களை உணர்த்திவிட்டன என கூறியுள்ளார். நம் உடலுக்கும் மனதுக்கு ஓய்வு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தில் பல இளைஞர்களும் , நிறுவன தலைவர்களும் அதிக நேரம் வேலை பார்ப்பது மற்றும் விடுமுறை நாட்களிலும் உழைப்பது ஆகியவற்றை பெருமையாக கருதுகின்றனர். ஆனால், இது மனித உடலையும் மனதையும் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு நானே உதாரணம் என சிவராம் பிரியாஸ் கூறியுள்ளார். வேலை முக்கியமானதுதான், ஆனால் ஆரோக்கியத்தை விட முக்கியமானது அல்ல என்பதை அவரது இந்த பதிவு உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


