இந்திய போக்குவரத்தில் இன்று ஆன்லைன் டாக்சி மற்றும் ஆட்டோ புக்கிங் சேவை மிகவும் முக்கியமானதாக மாறிவிட்ட நிலையில், அதன் கட்டணம் சமீபத்தில் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஓலா, உபர் நிறுவனத்திடம் புகார் அளிப்பது மட்டும் அல்லாமல் அரசுப் போக்குவரத்து துறையிலும் புகார் அளிக்கத் துவங்கியுள்ளனர்.
பெங்களூர்
இந்த நிலையில் கர்நாடக போக்குவரத்துத் துறை ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனங்களுக்கு முக்கியமான உத்தரவிட்டு உள்ளது. இது பெங்களூர் மக்களைப் பெரிய அளவில் பாதிக்க உள்ளது, இது அடுத்தடுத்து பிற நகரங்களிலும் இதுப்போன்ற உத்தரவு வர வாய்ப்பு உள்ளது.
உபர், ஓலா
ஆன்லைன் புக்கிங் செயலிகளான உபர், ஓலா ஆகிய நிறுவனங்களின் ஆட்டோரிக்ஷா சேவையில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் வந்த நிலையில் கர்நாடக போக்குவரத்துத் துறை பெங்களூரு நகரத்தில் ஆட்டோரிக்ஷா சேவை நிறுத்த அனைத்து வாகன அக்ரிகேட்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
3 நாளில் சேவை நிறுத்தம்
இதுமட்டும் அல்லாமல் கர்நாடக போக்குவரத்துத் துறை அதிகக் கட்டணத்தை வசூலிப்பது 'சட்டவிரோத' நடைமுறை என அறிவித்து ஓலா ஆப்-ன் தாய் நிறுவனமான ANI டெக்னாலஜிஸ், உபர் மற்றும் ரேபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு 3 நாளில் சேவை நிறுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது, மேலும் தகுந்த விளக்கத்தையும் கொடுத்துள்ளது.
புகார்
கர்நாடக போக்குவரத்துத் துறையிடம் பலர் ஆட்டோ சவாரியில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனப் புகார் அளித்துள்ளதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 2 கிலோமீட்டர் மட்டுமே தொலைவு கொண்ட பயணத்திற்கு 100 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாகப் புகார் அளித்துள்ளனர்.
சாதாரண ஆட்டோ கட்டணம்
ஆனால் பெங்களூருவில் ஆன்லைன் அல்லாத புக்கிங் அல்லாமல் நேரடியாக ஆட்டோ சவாரி செய்தால் முதல் 2 கிலோமீட்டருக்கு 30 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 15 ரூபாயும் விதிக்கப்படுகிறது.
போக்குவரத்து ஆணையர்
மேலும் ஓலா, உபர் மற்றும் ரேபிடோ நிறுவனங்களுக்கு டாக்சி சேவை மட்டுமே அளிக்க அனுமதி உண்டு ஆட்டோ சேவை அளிக்க அனுமதி இல்லை எனப் போக்குவரத்து ஆணையர் டி.எம்.குமார் தெரிவித்துள்ளார்.