இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பில்லியனரான கெளதம் அதானி சில வாரங்களுக்கு முன்பு தான் பல சர்வதேச பில்லியனர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். எனினும் அந்த இடத்தினை தக்க வைத்துக் கொள்ள முடியாமல், தற்போது மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார் அதானி.
ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர் அறிக்கையின் படி, அகமதாபாத்தினை தலைமையிடமாக கொண்ட தொழிலதிபரான கெளதம் அதானியை, பிரெஞ்ச் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் இ-காமர்ஸ் ஜாம்பவான் ஆன ஜெப் பெசோஸ்-ஆல் 4வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.
முதல் மூன்று பில்லியனர்கள் யார்?
இந்த பட்டியலில் டெஸ்லாவின் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் வலுவாக இருந்து வருகின்றார். இவரின் சொத்து மதிப்பு 249.9 பில்லியன் டாலராகும். இதே பெர்னால்டின் சொத்து மதிப்பு 142.2 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், ஜெப் பெசோஸ் 138.2 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அதானி & அம்பானியின் சொத்து
இந்த டாப் பில்லியனர்கள் பட்டியலில் 4வது இடத்தில் கெளதம் அதானி இடம்பெற்றுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 136 பில்லியன் டாலராகும். இந்தியாவின் இரண்டாவது பில்லியனரான முகேஷ் அம்பானி, 84.6 பில்லியன் டாலருடன் 8வது இடத்தில் உள்ளார்.
என்ன காரணம்?
கெளதம் அதானி கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு வகையான முதலீடுகள், வணிக விரிவாக்கங்கள் என பல காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் அதானி குழும பங்குகள் பல காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதுவும் அதானியின் சொத்து மதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பங்கு சந்தைகள் ஏற்றம் ஏன்?
குறிப்பாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்பு மத்தியில், இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி அதிகரிப்பினை செய்துள்ளது. இது பணவீக்கத்தினை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இனியும் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் கடந்த அமர்வில் இந்திய பங்கு சந்தையானது பலத்த ஏற்றத்தினை கண்டுள்ளது.
அதானியின் மெகா திட்டம்
அதானி குழுமத்தின் நிறுவனங்கள் எனர்ஜி, கப்பல், கேஸ் துறை, சிமெண்ட் என பல துறைகளில் செயல்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அதானி குழுமம் 100 பில்லியன் டாலர் முதலீட்டினை அடுத்த 10 ஆண்டுகளில் செய்யவுள்ளதாகவும், இதில் 70% முதலீட்டினை பசுமை ஆற்றலிலும் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தது. இதற்கிடையில் அதானியின் சொத்து மதிப்பு அதிகரிக்கலாம்.