இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50% வரி விதிக்கிறது. முதலில் 25% வரி விதித்த டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனை என கூடுதலாக 25% வரி விதித்தது. இதனால் இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி தொழில்கள் சார்ந்து இயங்கக்கூடிய நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன.
தமிழ்நாட்டில் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ,தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் இந்த 50 சதவீத வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இதனால் வேலை இழப்பு அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழலில் தான் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. ஆனால் இதுவரை ஒப்பந்தம் எதுவும் எட்ட படவில்லை. எப்போது இந்த ஒப்பந்தம் போடப்படும் என்பது குறித்து தொழில்துறை சார்ந்தவர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சு வார்த்தையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அமெரிக்க பிரதிநிதியான Jamieson Greer இந்தியா இந்த வர்த்தக பேச்சு வார்த்தையில் சிறந்த சலுகைகளை அமெரிக்காவிற்கு தந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிட்ட சில விஷயங்களில் உடன்பாடுகள் எட்டப்பட்டு வருகின்றன என்பதும் உறுதியாகியிருக்கிறது . அமெரிக்காவை பொறுத்தவரை தங்களுடைய வேளாண் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிக்க வேண்டுமென தொடர்ந்து கேட்டு வருகிறது. ஆனால் இந்திய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
குறிப்பிட்ட சில விஷயங்கள் தான் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சு வார்த்தை முன்னேற்றம் அடையாமலேயே இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த சூழலில் தான் நாடாளுமன்ற சப் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய Jamieson Greer இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, தற்போது அமெரிக்க குழுவினர் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என கூறியுள்லார்.
மிக முக்கியமான வேளாண் பொருட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறியிருக்கிறார் . பேச்சு வார்த்தை நீண்ட காலமாக நடந்து கொண்டு வரக்கூடிய சூழலில் தான் இந்தியா சில விஷயங்களில் விட்டுக் கொடுத்த போவதாக தகவல்கள் வெளியாகிருக்கின்றன. இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போது தான் எந்தெந்த அமெரிக்க பொருட்களுக்கு எல்லாம் இந்திய சந்தை திறக்கப்படும் என்பது தெளிவாக தெரிய வரும்.
ஆனால் இந்தியா அமெரிக்காவுக்கு மிகச்சிறந்த சலுகைகளை இந்த வர்த்தக பேச்சுவார்த்தையில் தந்திருக்கிறது என Jamieson Greer கூறியிருக்கிறார் . இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications