அமெரிக்கா-வை சேர்ந்த வீட்டு கடன் சேவை நிறுவனமான Better.com நிறுவனத்தின் சிஇஓ விஷால் கார்க் கடந்த வாரம் எவ்விதமான முன் அறிவிப்புமின்றி 900 ஊழியர்களை ஓரே நேரத்தில் ஓரே ஒரு ஜூம் கால் மூலம் பணியில் இருந்து நீக்கியதும், ஜூம் காலில் அவர் பேசிய விதமும் உலகம் முழுவதும் வெறுப்பையும், எதிரப்பையும் இந்நிறுவனத்திற்குச் சம்பாதித்துக் கொடுத்தது.
ஆனந்த் மஹிந்திரா உட்படப் பல நிறுவன தலைவர்களும் விஷால் கார்க் சிஇஓ-வாக இருக்கத் தகுதி இருக்கா என்பது போன்ற கேள்வியை எழுப்பினர்.
இந்நிலையில் விஷால் கார்க்-ன் செயல் மற்றும் நிறுவனம் சம்பாதித்துள்ள வெறுப்பையும் பார்த்து இந்நிறுவன உயர் அதிகாரிகள் தானாக முன் வந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
900 ஊழியர்கள் பணிநீக்கம்
Better.com நிறுவனத்தில் 900 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்பு இந்நிறுவனத்தில் பணியாற்றிய 3 உயர் அதிகாரிகள் தானாக முன் வந்து வெளியேறியுள்ளனர். இது விஷால் கார்க் செயலுக்குப் பதிலடியாகும், Better.com நிறுவனத்தின் எதிர்காலத்திற்குக் கேள்விக்குறியாகவும் உள்ளது.
3 உயர் அதிகாரிகள் ராஜினாமா
Better.com நிறுவனத்தின் பப்ளிக் ரிலேஷன் பிரிவு தலைவர் தான்யா கில்லோக்லி, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் மெலனி ஹான் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் துணை தலைவர் பேட்ரிக் லெனிஹான் ஆகியோர் தற்போது நிறுவன பணியில் இருந்து வெளியேறியுள்ளது. இவர்கள் மூவரையும் விஷால் கார்க் பணிநீக்கம் செய்யவில்லை என்பது முக்கியமான தகவல்.
Better.com
ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் ஒரு இந்தியர் தலைமையில் இயங்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் ஊழியர்களுக்கு மதிப்பு அளிக்காமல் எவ்விதமான முன் அறிவிப்புமின்றி, ஊழியர்கள் பேசவும் வாய்ப்பு அளிக்காமல் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 9 சதவீதத்தைச் சில நிமிட ஜூம் காலில் பணிநீக்கம் செய்வது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
விஷால் கார்க்
இந்தச் செயல் அமெரிக்கா, இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. Better.com நிறுவனத்தின் சிஇஓ விஷால் கார்க்-ன் செயல் எந்த அளவிற்குப் பணிநீக்கம் செய்யப்பட்ட 900 ஊழியர்களைப் பாதித்ததோ, அதைவிடப் பல மடங்கு தற்போது நிறுவனத்தையும் விஷால் கார்க்-ஐயும் பாதித்துள்ளது.
விஷால் கார்க் மன்னிப்பு
விஷால் கார்க் தனது தவறை உணர்ந்து பொது வெளியில் மன்னிப்பு கேட்டு உள்ளார், 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற முடிவு என்னுடையது மட்டுமே அதைச் சரியான முறையில் செய்யாமல் இருந்தது 100% என்னுடைய தவறு என நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.