கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையிலிருந்து ஷீரடிக்கு இந்தியாவின் முதல் தனியார் ரயில் இயங்கியது என்பதை பார்த்தோம்.
அந்த வகையில் இரண்டாவது தனியார் ரயிலாக மதுரையிலிருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யாராஜ் நகருக்கு இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியாவிலுள்ள பாரம்பரியமான இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கவும் இந்த ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
’பாரத் கவுரவ்'
இந்தியாவின் வளமான, கலாச்சார, பாரம்பரியம் மற்றும் வரலாற்று இடங்களை காட்சி படுத்துவதற்காக இந்தியன் ரயில்வே கடந்த நவம்பர் மாதம் 'பாரத் கவுரவ்' ரயில்கள் இயக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கோவை -ஷீரடி
அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை கோவை வடக்கில் இருந்து ஷீரடிக்கு முதல் தனியார் ரயில் இயக்கப்பட்டது என்பதும் இந்த ரயிலில் சுமார் 70 சதவீத பயணிகள் பயணம் செய்ததாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
மதுரை - பிரக்யாராஜ்
இந்த நிலையில் கோவை -ஷீரடி ரயிலை தொடர்ந்து தற்போது மதுரையில் இருந்து சென்னை வழியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யாராஜ் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூன் 23 முதல்
ஜூன் 23ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்கும் மதுரை-பிரக்யாராஜ் ரயில், 12 நாட்கள் சுற்றுலா செல்லும் ரயிலாக இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 7 என இருக்கும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கட்டணம்
மதுரை வரை பிரக்யாராஜ் வரை செல்லும் இந்த சிறப்பு ரயிலுக்கான கட்டணம் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து பிரக்யாராஜ் வரை செல்லும் இந்த ரயில் சென்னை வழியாக விஜயவாடா, வாரணாசி, கொல்கத்தா, பூரி என 12 நாள் யாத்திரையாக பிரக்யாராஜ் சென்றடையும். அதேபோல் மறுநாள் பிரக்யாராஜ் நகரில் இருந்து மதுரைக்கு கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனங்கள்
பாரத் கவுரவ்' ரயில்கள் என்ற திட்டத்தின்படி மொத்தம் 190 ரயில்கள் இயக்கப்படும் என்றும் இந்த ரயில்கள் ஐஆர்சிடிசி மட்டுமின்றி தனியார் நிறுவனங்களாலும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தனியார் நிறுவனங்கள் ரயில்களை குத்தகை அடிப்படையில் எடுத்து பயணிகளுக்கு ரயில் சேவையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவேற்பு
கோவை - ஷீரடி ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது போல் மதுரை - மதுரை-பிரக்யாராஜ் ரயிலுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கோவை -ஷீரடி ரயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது போல் ரயில்வே ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மதுரை -பிரக்யாராஜ் ரயிலுக்கும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications