இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐடி சேவை நிறுவனமாக ஸ்ரீதர் வேம்புவின் zoho நிறுவனம் இருக்கிறது. ஜிமெயில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு போட்டியாக வளர்ந்து வருகிறது ஜோஹோ. இதன் நிறுவனராக இருக்கும் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். ஐடி ஊழியர்கள் எப்படி திறனை வளர்க்க வேண்டும், நாட்டின் பொருளாதாரம் குறித்து சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் பதிவுகள் கவனம் பெறும்.
அண்மை காலமாக இந்திய ஐடி ஊழியர்களின் அமெரிக்க கனவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது,. அமெரிக்க அரசு ஹெச்1பி விசா முறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது, இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலைகளை பறிக்கிறார்கள் என தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்திய டெக்கிகள் அமெரிக்கா செல்வதும் வேலை பார்ப்பதும் சிக்கலாகியுள்ளது. இத்தகைய சூழலில் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் "அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு திறந்த மடல். பாரதத்தைச் சேர்ந்த என் அன்பு சகோதர சகோதரிகளே, சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி சென்றேனோ, அதேபோல்தான் நீங்களும் கையில் பணமில்லாமல், ஆனால் பாரதத்தின் சிறந்த கல்வியையும் பாரம்பரியத்தையும் சுமந்து அமெரிக்காவிற்கு சென்றிருப்பீர்கள். இன்று மிகச்சிறந்த வெற்றிகளைக் குவித்திருக்கிறீர்கள். அமெரிக்கா நமக்கு நல்ல வாழ்வை அளித்துள்ளது, அதற்காக நாம் நன்றியுடன் இருக்க வேண்டும், ஏனெனில் 'நன்றி மறவாமை' என்பது நமது பாரதப் பண்பாடு என கூறியுள்ளார்.
ஆனாலும் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், கணிசமான எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள், இந்தியர்கள் அமெரிக்க வேலைவாய்ப்புகளை 'பறித்துக் கொள்கிறார்கள்' என்றும், நமக்கு நியாயமற்ற முறையில் வெற்றி கிடைத்தது என்றும் நம்புகிறார்கள். அடுத்த தேர்தல் இதை மாற்றும் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அது மாறாது என கூறியுள்ளார்.
அங்கே இருப்பவர்கள் இரண்டு வகையினர், ஒன்று, நமது பாரத நாகரிகத்தையே வெறுப்பவர்கள்; மற்றொன்று, நாகரிகம் என்ற கட்டமைப்பையே வெறுப்பவர்கள். இது 'தீவிர வலதுசாரி' மற்றும் 'அதிதீவிர இடதுசாரி' ஆகியவற்றுக்கு இடையேயான போர். இதில் நீங்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே என கூறியுள்ளார்.
இன்னொரு பக்கம், இப்போதும் எப்போதும் மாறாத ஒரு உண்மை இருக்கிறது: உலக அரங்கில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் மரியாதை, இந்தியாவின் வளர்ச்சியையும் வளத்தையும் பொறுத்தே அமையும். இந்தியா ஏழ்மையிலேயே நீடித்தால், இடதுசாரிகள் நம்மிடம் பரிதாபப்பட்டு 'நீதிப் போதனைகள்' செய்வார்கள்; வலதுசாரிகளோ நம்மை ஏளனமாகப் பார்த்து 'வெறுப்புப் போதனைகள்' செய்வார்கள். இவை இரண்டையும் 'மரியாதை' என்று நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளார்.
இன்றைய உலகில் மரியாதையும், வளமும், பாதுகாப்பும் ஒரே ஒரு இடத்திலிருந்துதான் பிறக்கின்றன: அது ஒரு நாட்டின் 'தொழில்நுட்பத் திறன்'. அந்தத் திறனை அடையத் தேவையான அறிவுத்திறன் இந்தியாவிடம் அபரிமிதமாக உள்ளது. ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அந்தத் திறமையை நாம் பெருமளவில் ஏற்றுமதி செய்துவிட்டோம், குறிப்பாக அமெரிக்காவிற்கு, எப்போது இந்தியாவில் அந்தத் தொழில்நுட்ப வலிமையை நாம் உருவாக்குகிறோமோ, அப்போதுதான் நமது நாகரிகத்தின் பலம் உலகிற்குத் தெரியவரும் என கூறியுள்ளார்.
இதைச் சிந்திப்பது உங்களில் பலருக்குக் கடினமாக இருக்கலாம். இருந்தாலும் தயவுசெய்து தாய்நாட்டிற்குத் திரும்பி வாருங்கள். பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவைப்படுகிறது. நமது நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களை வளமான பாதையில் வழிநடத்த, நீங்கள் இத்தனை ஆண்டுகளாகப் பெற்ற தொழில்நுட்பத் தலைமைப் பண்பு தேவை. இதை ஒரு புனிதமான லட்சியமாக எடுத்துக்கொண்டு நாம் செயல்படுவோம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது அமெரிக்காவில் இருக்கும் இந்திய டெக்கிகள் தாயகம் திரும்பி இங்கே தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இது உலக அரங்கில் இந்தியாவை இன்னும் வலிமையான நாடாக மாற்றும் என கூறியுள்ளார். இந்தியர்களை நரக குழிகள் என குறிப்பிட்ட சில தினங்களுக்கு முன்னர் டிரம்ப் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஸ்ரீதர் வேம்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications


