பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சூழ்நிலையை மேம்படுத்தவும், பல வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் நாட்டின் 2வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பார்த் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
வருடம் சுமார் 8,000 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே அள்ளித்தரும் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான பார்த் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை வாங்க எந்த ஒரு முன்னணி நிறுவனமும் முன்வரவில்லை என்பது தான் சோகமான விஷயமாக உள்ளது.
இந்நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய இதுவரை 4 முறை அறிவிக்கப்பட்டும் யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் நவம்பர் 16ஆம் தேதி தான் விருப்பம் தெரிவிக்கக் கடைசி நாளாக உள்ளது.
52.98 சதவீத பங்குகள்
மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் 52.98 சதவீத பார்த் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்த நிலையில் எண்ணெய் வர்த்தகத்தில் இருக்கும் முன்னணி பல நிறுவனங்கள் இந்தப் பங்குகளை வாங்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை யாரும் முன்வரவில்லை.
முன்னணி நிறுவனங்கள்
பார்த் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் பிரிட்டன் BP, பிரான்ஸ் நாட்டின் டோட்டல், சவதியின் ஆராம்கோ, ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் ஆகிய நிறுவனங்கள் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் முன்வரவில்லை.
70,000 கோடி ரூபாய் டீல்
பார்த் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்றால் அரசிடம் இருக்கும் 52.98 சதவீத பங்குகளை 47,430 கோடி ரூபாய்க்கும், பொதுச் சந்தையில் இருக்கும் 26 சதவீத பங்குகளை 23,276 கோடி ரூபாய்க்கும் வாங்க வேண்டும்.
இது கிட்டதட்ட சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான டீல் என்பதால் சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் இந்நிறுவனத்தை வாங்குவது சவால் ஆக உள்ளது.
8 முதல் 9 வருடம்
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பார்த் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஏற்றுமதி, ரீடைல் வர்த்தகம், சுத்திகரிப்பு எனப் பல பிரிவு வர்த்தகம் மூலம் வருடத்திற்கு 8,000 கோடி ரூபாய் லாபம் பெற்று வருகிறது.
இந்நிலையில் 70,000 கோடி ரூபாய் தொகையை வெறும் 8 முதல் 9 வருட காலத்திற்குள் திரும்பப் பெற முடியும்.
என்ன காரணம்..?
பார்த் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் லாப அளவீடுகளும், வர்த்தகமும் சிறப்பாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில் யாரும் வாங்க முன்வராததிற்கு 2 முக்கியக் காரணம் உள்ளது.
1. கொரோனா பாதிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் சேவையைப் பெரிய அளவில் குறைத்துள்ளது. இதனால் உலக நாடுகளில் இதன் தேவையும் குறைந்துள்ளது.
2. உலகமே தற்போது ஹைட்ரஜென் மற்றும் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வேகமாக மாறி வரும் இந்தச் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை.