ஒரு காலகட்டத்தில் போட்டி போட்டுக் கொண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கி வந்தன.
குறிப்பாக ஜியோவின் அறிமுகத்துக்கு பிறகு பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன எனலாம்.
ஏனெனில் ஜியோவின் போட்டியை சமாளிக்க லாபத்தினை மறந்து ஆஃபர்களை வாரி வழங்கின. ஆனால் தற்போது அதே வேகத்தில் கட்டணங்களை ஒவ்வொரு நிறுவனமும் உயர்த்த ஆரம்பித்துள்ளன.
வருமானம் குறைந்து விட்டது
அதிலும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், டெலிகாம் கட்டணங்களை உயர்த்துவது குறித்து, சுனில் மிட்டல் சமீபத்தியில் கூறியிருந்தார். அப்போது ஏர்டெல் நிறுவனத்திற்கு சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து வருமானம் 220 - 330 ரூபாய் ஆக இருந்தது. ஆனால் அது ஜியோவின் வருகைக்கு பிறகு 130 ரூபாயாக குறைந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
கட்டணங்கள் அதிகரிப்பு
அதோடு ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் தயங்காது என்றும் கூறியிருந்தார். மேலும் தொலைத் தொடர்பு துறையானது மிகுந்த அழுத்தத்தில் உள்ளது. ஆக கட்டணங்கள் உயர வேண்டும் எனவும் மிட்டல் கூறினார். இப்படி கூறியிருந்த நிலையில் தற்போது சொன்னபடியே கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
அர்பு விகிதம்
இந்த கட்டண அதிகரிப்பானது குறிப்பாக அதன் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அதன் சில்லறை மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு என பாரபட்சம் பாராமல் சொன்னதைபோலவே அதிகரித்துள்ளது. இதன் மூலம் இனி அதன் அர்பு விகிதம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணங்கள் அதிகரிப்பு
தற்போது இந்த தொலைத் தொடர்பு நிறுவனம் அதன் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் 199 ரூபாய் மற்றும் 249 ரூபாய்க்கான திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாறாக அதன் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள், அடுத்த பில்லிங்கில் 299 ரூபாய்க்கான திட்டத்திற்கு மாறுவார்கள்.
ஏர்டெல்லில் இந்த திட்டமும் அதிகரிப்பு
குடும்ப போஸ்ட் பெய்டு திட்டமான 749 ரூபாய்க்கான திட்டத்தினை, தற்போது 999 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏர்டெல்லில் தற்போது மொத்த வாடிக்கையாளர்களில் வெறும் 5% வாடிக்கையாளர்கள் மட்டுமே போஸ்ட்பெய்டு திட்டமாகும். எனினும் வருவாய் ரீதியாக பார்க்கும்போது 20% பங்கு வகிக்கின்றனர்
வோடபோன் நிலவரம்
இதே வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் 7% பங்கினைக் கொண்டுள்ளனர். அவர்களின் ஒட்டுமொத்த வருவாயில் 25% போஸ்ட்பெய்டு மூலமாக கிடைக்கின்றது.
வோடபோன் நிறுவனமும் சமீபத்தில் தான் அதன் போஸ்ட்பெய்டு கட்டணங்களை அதிகரித்தது. இதன் மூலம் 598 ரூபாய் மற்றும் 749 ரூபாய்க்கான திட்டங்கள் தற்போது 649 ரூபாய் மற்றும் 799 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஜியோ நிலவரம்
இதே ஜியோவின் திட்டங்கள் 199 ரூபாயில் இருந்து 1499 ரூபாய் வரையில் உள்ளது.
ஏர்டெல்லின் இந்த கட்டண அதிகரிப்புக்கு மத்தியில், கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் அதன் டேட்டா திட்டங்கள் 299 ரூபாய் திட்டத்தில் 30 ஜிபி டேட்டாவும், 349 ரூபாய்க்கான திட்டத்தில் 60 ஜிபி டேட்டாவும், 1,599 ரூபாய்க்கான திட்டத்தில் 500ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.