உலகளவில் இண்டர்நெட் சேவையில் தற்போது 5ஜி சேவை எந்த அளவிற்கு முக்கியமாகவும், பிரபலமாகவும் இருக்கிறதோ, அதை விடவும் பிராண்ட்பேன்ட் சேவையில் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அளிக்கும் செயற்கைக்கோள் வாயிலான இண்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் தான் தற்போது மிகப்பெரிய டெக்னாலஜி பிரேட்டவுனாக விளங்குகிறது.
இந்நிலையில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குப் பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் இத்தகைய சேவையை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் விரைவில் இந்தியாவிலும் செயற்கைக்கோள் வாயிலான இண்டர்நெட் சேவை அறிமுகமாக அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
பார்தி ஏர்டெல்
இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முதலீட்டில் இயக்கும் ஓன்வெப் இன்று செயற்கைகோள் வாயிலான இண்டர்நெட் சேவைக்காகப் புதிதாக 34 செயற்கைகோள்களைப் பிரெஞ்சு கயானாவின் குரோவில் உள்ள கயானா விண்வெளி மையத்தில் இருந்து ஏரியன்ஸ்பேஸ் விண்ணில் செலுத்தியுள்ளது.
ஒன்வெப் நிறுவனம்
ஒன்வெப் நிறுவனம் 2022ஆம் ஆண்டில் முதல் முறையாகவும் மொத்தமாக 13வது முறையாகச் செயற்கைகோள் வாயிலான இண்டர்நெட் சேவைக்காக விண்ணில் சுமார் 428 செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. ஒன்வெப் நிறுவனம் சுமார் 648 செயற்கைக்கோள்களை அனுப்ப இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் 66 சதவீத இலக்கை எட்டியுள்ளது.
எலான் மக்ஸ்-ன் ஸ்டார்லிங்க்
இத்தகைய சேவையில் எலான் மக்ஸ்-ன் ஸ்டார்லிங்க் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது இதற்குப் போட்டியாக ஓன்வெப் களமிறங்கியது மட்டும் அல்லாமல், இந்நிறுவனம் இந்திய நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் இயங்குவது முக்கியமானதாக உள்ளது.
அதிவேக இண்டர்நெட் சேவை
இந்தச் செயற்கைகோள் வாயிலான இண்டர்நெட் சேவை மிகவும் சிறப்பான அதிவேக டேட்டா சேவையைப் பூமி முழுவதும் கிடைக்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது. மேலும் ஸ்டார்லிங்க் சேவையை விடவும் ஒன்வெப் சேவையின் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில் பார்தி ஏர்டெல் அவசர அவசரமாக ஓன்வெப் மூலம் அதிகப்படியான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதனால் விரைவில் இந்தியாவில் இச்சேவை வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.