டெல்லி: இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தினை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போதைக்கு 2 மாநிலங்களில் மட்டுமே கட்டணம் உயர்த்தியுள்ள நிலையில், விரைவில் நாடு முழுவதும் அதிகரிக்கப்படலாம் என தெரிகிறது.
ஏற்கனவே நாடு முழுவதும் பணவீக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இது மேற்கொண்டு வாடிக்கையாளார்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கலாம்.
என்ன திட்டம்?
இப்போது ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணமாக 99 ரூபாய் உள்ளது. இந்த ரீசார்ஜ் கட்டணத்தில் நொடிக்கு 2.5 பைசா கட்டணம் மற்றும் 200 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் இந்த திட்டத்தில் தான் திருத்தம் செய்துள்ளது. இனி பயனர்கள் குறைந்தபட்சம் 155 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.
ஏர்டெல் திட்டங்களில் அப்படி என்ன வசதி?
ஏர்டெல் நிறுவனம் கட்டணம் அதிகரிப்பு செய்திருந்தாலும், இது ஒரு சோதனை முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனினும் விரைவில் இது முழுமையாக அமலுக்கு வந்தாலும் மறுபதற்கில்லை. பார்தி ஏர்டெல்லின் இந்த புதிய திட்டத்தில் அன்லிமிடெட் கால் வசதி, 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ் எம் எஸ் வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய திட்டங்கள் இனி இருக்குமா?
ஏர்டெல்லின் இந்த அடிப்படையாக கொண்ட இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வரலாம் என தெரிகிறது. இதனால் ஏர்டெல்லில் உள்ள சிறிய திட்டங்கள் இனி இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக தற்போது ஏர்டெல்லில் வழங்கப்பட்டு வரும் திட்டமான 99 ரூபாய் இருக்க வாய்ப்பிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்புவை அதிகரிக்க திட்டம்
தற்போதைய நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது அர்பு விகிதத்தினை அதிகரிக்க மீண்டும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது. தற்போது டெலிகாம் சந்தையில் நிலவி வரும் போட்டிக்கு மத்தியில், ஏர்டெல்லின் இந்த முடிவு சிறிய அளவிலான வாடிக்கையாளர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அதிகரிக்க கட்டணம்
கடந்த ஆண்டில் 2021ம் ஆண்டில் இதுபோன்ற சோதனையை மேற்கொண்டது. அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் சலுகையை தேர்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.