இந்திய டெலிகாம் சந்தையில் ஆகாஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் ஜியோ-வை எதிர்த்துப் போட்டிப்போடத் திறன் கொண்ட ஓரே நிறுவனமான பார்தி ஏர்டெல் ஜூன் காலாண்டில் அதிகப்படியான லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அனைத்து டெலிகாம் சேவை நிறுவனங்களும் 5ஜி சேவை அறிமுகத்தில் பிசியாக இருக்கும் வேளையில் பார்தி ஏர்டெல் தனது தரமான காலாண்டு முடிவுகளை அறிவித்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 467 சதவீதம் அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ஜூன் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 1,607 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் லாபம் 20 சதவீதம் குறைந்துள்ளது.
வருவாய்
மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ஜூன் காலாண்டில் 22 சதவீதம் அதிகரித்து ரூ.32,805 கோடியாக உள்ளது. மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்கள்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு மற்றும் சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாய் அளவுகளில் ஏற்பட்ட உயர்வு ஆகியவை ஜூன் காலாண்டில் உயர்ந்துள்ளது. இந்து பல முறை டெலிகாம் சேவை உயர்வுக்குப் பின்பு வந்த வளர்ச்சி என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இந்திய வர்த்தகம்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் இருந்து மட்டும் சுமார் 23,319 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது, குறிப்பாக மொபைல் சேவையில் இருந்து கிடைக்கும் வருவாய் 27.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் ஏர்டெல் பிற வர்த்தகத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் 15.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
மேலும் இந்திய வர்த்தகத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 41.9 சதவீதம் அதிகரித்து 36.2 கோடி டெலிகாம் வாடிக்கையாளர்கள் உயர்ந்து இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்கா
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்பிரிக்க வர்த்தக வருவாய் நிலையான நாணய மதிப்பீட்டில் 15.3 சதவீதம் வருடாந்திர உயர்வை பதிவு செய்துள்ளது. ஆப்பிரிக்காவில் பார்தி ஏர்டெல் சுமார் 13.16 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது.