இந்திய டெலிகாம் சந்தையில் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் நிலையான வர்த்தக வளர்ச்சியை அடைந்து வரும் ஏர்டெல் நிறுவனத்தின் மார்ச்31 உடன் முடிந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் எப்போதும் இல்லாத வகையில் சுமார் 5,237 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. இது செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் இந்நிறுவன வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் எனத் தெரிகிறது.
2020 மார்ச் காலாண்டில் 5,237 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்த பார்தி ஏர்டெல், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 107.2 கோடி ரூபாய் லாபத்தை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடன் அளவில் சரிவு
மார்ச் 31, 2019இல் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த கடன் 108,235 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2020 மார்ச் 31இல் 88,251 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இது இந்நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாமல் கணிசமான பாதிப்பை மட்டுமே எதிர்கொள்ளும்.
வருமானம்
ஏர்டெல் நிறுவனம் லாபத்தைப் பெறவில்லை என்றாலும், அதிகளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் சுமார் 23,723 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் சுமார் 15.1 சதவீத அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர் வருமானம்
இதேபோல் ஏர்டெல் நிறுவனம் ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் சராசரி வருமானத்தின் (ARPU) அளவு அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் 123 ரூபாயாக இருந்த நிலையில் 2020 மார்ச் காலாண்டில் 154 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இண்டர்நெட் டேட்டா பயன்பாட்டு அளவும் கடந்த ஒரு ஆண்டில் 74.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
வாடிக்கையாளர் எண்ணிக்கை
கடந்த நிதியாண்டில் 404 மில்லியனாக இருந்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 2020 மார்ச் காலாண்டில் 423 மில்லியனாக உயர்ந்து 4.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதேபோல் ஏர்டெல் வாடிக்கையாளர் நெட்வொர்க்-ஐ பயன்படுத்தும் வேரம் 796 பில்லியன் நிமிடங்களில் இருந்து 902 பில்லியன் நிமிடங்களாக உயர்ந்து 13.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.