முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தக வளர்ச்சியில் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக விளங்கும் பியூச்சர் குரூப்-ன் ரீடைல் விற்பனை பிராண்டான பிக் பஜார் தற்போது நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில் புதிய சேவையை அறிமுகம் செய்து பிரமிக்க வைத்துள்ளது.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையில் ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்தப் பல புதிய வழிகளைத் தேடி வரும் நிலையில், பல முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களின் கனவு திட்டத்தைப் பிக் பஜார் கொண்டு வந்துள்ளது.
2 மணிநேரத்தில் டெலிவரி
ரீடைல் விற்பனை நிறுவனமான பிக் பஜார், ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் நேரடியாகப் போட்டிப்போடும் வகையில் ஆர்டர் செய்த பொருட்களை 2 மணிநேரத்தில் டெலிவரி செய்யும் எக்ஸ்பிரஸ் ஹோம் டெலிவரி சேவையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இப்புதிய சேவையின் வாயிலாக அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஆன்லைன் மூலம் பெறும் வர்த்தகத்தின் அளவை இரட்டிப்பு வளர்ச்சி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஹோம் டெலிவரி சேவை
கடந்த மாதம் பிக் பஜார் தனது அனைத்து ரீடைல் கடைகளிலும் ஹோம் டெலிவரி சேவையை அறிமுகம் செய்த நிலையில் தற்போது கிளிக் டூ ஹோம் என்ற ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா-வை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஷாப்பிங் திருவிழாவின் அடிப்படையே 2 மணிநேர டெலிவரி சேவையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது தான் எனப் பிக் பஜார் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்- பியூச்சர் குரூப் - அமேசான்.காம்
இந்தியா முழுவதும் விரிந்திருக்கும் பிக் பஜார் கிளைகள் சில வருடங்களுக்கு முன்பு வரை இந்திய ரீடைல் சந்தையின் முன்னணி வர்த்தக நிறுவனமாக இருந்த நிலையில், வர்த்தகப் போட்டி, இந்நிறுவனத்தின் கடன் சுமை ஆகியவற்றின் காரணமாக வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் தொடர்ந்து இழந்து வந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் பியூச்சர் குரூப் வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்ற ரிலையன்ஸ் ரீடைல் முயற்சி செய்து அமேசான் தொடுத்துள்ள வழக்கின் காரணமாக முடங்கியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகம்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் வர்த்தகத்தை நடத்தி வரும் பியூச்சர் குரூப் தனது வர்த்தகத்தை மேம்படுத்த முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது. பல பிக் பஜார் கடைகளில் 40 சதவீத வர்த்தகம் ஆன்லைன் வாயிலாகக் கிடைக்கும் காரணத்தால் இதை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப் பியூச்சர் குரூப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மும்பை, டெல்லி, பெங்களூரு
கொரோனா லாக்டவுன் காரணத்தால் 2 மணிநேர டெலிவரி சேவை என்பது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்று உள்ளதாகவும், புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகங்கள் கிடைப்பதாகப் பியூச்சர் குரூப் தெரிவித்துள்ளது. தற்போது மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் 10-15 சதவீத வர்த்தகம் ஆன்லைன் வாயிலாகக் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளது பியூச்சர் குரூப். மேலும் சுமார் 150 நகரங்களில் இந்த 2 மணிநேர டெலிவரி பயன்பாட்டில் உள்ளது.


Click it and Unblock the Notifications