கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரச பல புதிய திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 3வது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் முடங்கிப்போன ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்தும் வகையிலும், இத்துறையில் புதிய வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தைக் குறுகிய காலகட்டத்தில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்து நகர வீட்டு திட்டங்குக்காகப் பிரத்தியேகமாகச் சுமார் 18,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் பெரு நகரங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குச் சொந்து வீட்டுக் கனவை நினைவாக்கும் வகையில் அமைந்துள்ளது.
PMAY
மக்கள் மத்தியில் வீட்டு வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், முதல் முறையாகச் சொந்த வீடு வாங்குவோருக்குப் பலன் அளிக்கும் வகையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2020-21ஆம் நிதியாண்டுக்கு சுமார் 18,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளாக தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கு ஏற்கனவே 8000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 10,000 கோடி ரூபாய் அளவிலான நிதி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ரியல் எஸ்டேட்
இந்த 18,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததன் மூவம் இந்தியாவில் சுமார் 12 லட்சம் வீடுகள் புதிதாகக் கட்ட துவங்கவும், 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படவும் முடியும்.
இதுமட்டும் அல்லாமல் சுமார் 78 லட்சம் வேலைவாய்ப்புகள் ரியல் எஸ்டேட் துறையில் உருவாக இந்த நிதி ஒதுக்கீடு பெரிய அளவில் உதவும்.
அரசு டென்டர்கள்
மேலும் அரசு கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின் டென்டர்களுக்கு EMO மற்றும் செயல்திறன் அடிப்படையிலான செக்யூரிட்டி தேவைகள் அதிகளவில் தளர்வு அளிக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
செயல்திறன் அடிப்படையிலான செக்யூரிட்டி அளவு 5 முதல் 10 சதவீதத்தை 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சலுகை தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 31, 2021
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் அனைத்தும் டிசம்பர் 31, 2021 வரையில் மட்டுமே என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் புதிய அரசு கட்டுமான திட்டங்களும் வேகமாக முடிக்க முடியும், அதேபோல் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும்.