முகேஷ் அம்பானி நீண்ட காலத்திற்குப் பின் தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தாண்டி டெலிகாம் துறைக்கு வரும் போது அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் ஒற்றை இலக்குடன் வந்த முகேஷ் அம்பானி மொத்த டெலிகாம் துறையை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு மிகவும் குறைவான கட்டணத்தில் இண்டர்நெட் சேவையை அறிவித்து மாபெரும் வெற்றியை அடைந்தார்.
இந்நிலையில் 4 வருடங்களுக்குப் பின் இதேபோல் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் ரீடைல் மூலம் ஈகாமர்ஸ் துறைக்குள் நுழைந்துள்ளார்.
ஏற்கனவே இந்திய ஈகாமர்ஸ் துறையில் கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என முடிவுடன் தீபாவளி பண்டிகையைக் குறிவைத்து மாபெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.
ஜியோமார்ட் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல்
இந்திய மக்களின் மிகப்பெரிய பண்டிகையாகக் கருதப்படும் இந்தத் தீபாவளி பண்டிகையைக் குறிவைத்து முகேஷ் அம்பானியின் ரீடைல் வர்த்தகப் பிரிவுகளான ரிலையன்ஸ் ரீடைல், ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகியவற்றில் அதிகளவிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோமார்ட் வருகையால் ஏற்கனவே மோசமான வர்த்தகச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
40-50% தள்ளுபடி
ஈகாமர்ஸ் தளங்களில் எப்போதும் இல்லாத அளவிற்குப் போட்டி அதிகரித்துள்ள நிலையில் இப்போட்டியைச் சமாளிக்கும் வகையில், ஜியோமார்ட் தளத்தில் இனிப்பு வகைகள், பிரியாணி மசாலா, அரிசி வகைகளுக்கு எப்போதும் இல்லாத வகையில் 50 சதவீத தள்ளுபடியை ஜியோமார்ட் அறிவித்துள்ளது. இதோடு பண்டிகை காலத்தில் முக்கியத் தேவையாக இருக்கும் பல பொருட்களுக்கு அதிகளவிலான தள்ளுபடியை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் டிஜிட்டல்
ஜியோமார்ட் தளத்தில் உணவுப் பொருட்களுக்கு அதிகளவிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ள ஜியோ, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
குறிப்பாகா சாம்சங் போன்களை இந்தியாவில் எந்த ஈகாமர்ஸ் தளமும் அளிக்காத மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக ரிலையன்ஸ் ரீடைல் தெரிவித்துள்ளது. இதேபோல் 40 சதவீத ரிபேட்களும் கொடுத்து வருகிறது.
9 முதலீடுகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகப் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை ஈட்டத் திட்டமிட்டு நாளில் இருந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்த நிலையில், கடைசியாகச் சவுதி சவரின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்டு நிறுவனம் 1.3 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9,555 கோடி ரூபாய் முதலீடு செய்ய 9வது முதலீட்டை ரிலையன்ஸ் ரீடைல் பெற்றது
47,265 கோடி ரூபாய் முதலீடு
இதுவரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சுமார் 10.5 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 47,265 கோடி ரூபாய் தொகையை முதலீடாகப் பெற ஒப்பந்தம் செய்துள்ளது.
50 சதவீத வர்த்தகம்
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டுச் சந்தை ஆய்வு நிறுவனமான கோல்டுமேன் சாச்சீஸ் நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள்ள ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை சந்தையில் 50 சதவீத வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இதோடு 2026ஆம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் ஈகாமர்ஸ் பிரிவில் சுமார் 200 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பெரும் என மோர்கன் ஸ்டாலி தெரிவித்துள்ளது.
வர்த்தகம்
இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் ரீடைல்-ன் 10,000க்கும் அதிகமான கடைகள் இருக்கும் காரணத்தால் ஜியோமார்ட் தனது சேவையை மிகவும் குறைந்த காலகட்டத்தில் நாட்டில் 200 நகரங்களில் மிகவும் எளிதாக விரிவாக்கம் செய்துள்ளது.
இதோடு ரிலையன்ஸ் இக்காலகட்டத்தில் டிஜிட்டல் விளம்பரத்தின் மீதான முதலீட்டைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட்
ஜியோமார்ட் வருகையும், அதிரடி விரிவாக்கமும் ஏற்கனவே அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் இந்தத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுச் சிறப்புத் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது ரிலையன்ஸ்.
இந்தத் தள்ளுபடியால் கண்டிப்பாக முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களின் வர்த்தகம் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.