இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவி வரும் இதேவேளையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி தனது 4வது பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக நிர்மலா சீதாராமன் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் பட்ஜெட் 2022ல் சாமானிய மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா..?!
கொரோனா பாதிப்பு
கோவிட்19 தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள் துவங்கி முதலாளிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரையில் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிதி உதவி அளித்து உதவி செய்தனர்.
அரசின் நேரடி நிதியுதவி
ஆனால் இன்னும் நாட்டில் பலருக்கு எந்த நிதியுதவியும் பெற முடியாமல் பல கோடி ஏழை மக்கள் குடும்பங்கள் வறுமை கோட்டிக்கிற்குக் கீழ் தள்ளப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்தப் பட்ஜெட் அறிவிப்பில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்ட மக்களுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
கோவிட் சிகிச்சை
கோவிட் சிகிச்சைக்கு மக்கள் செலவு செய்த தொகைக்கு வரி விலக்கு பெற வேண்டும் என்று வருமான வரித் துறை நிபுணர்கள் கூறிவருகின்றனர். மேலும் 80D பிரிவின் கீழ் 50000 ரூபாய் வரையில் வருமான வரிச் சலுகை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனாக்கான சிகிச்சை செலவு பல லட்சம்.
வரிச் சலுகை
இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகப்படியான வருமான பாதிப்புகளையும், கூடுதலான மருத்துவச் செலவுகளையும் எதிர்கொண்டு உள்ள நிலையில், மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் கடந்த 2 வருடம் மக்கள் கோவிட் சிகிச்சைக்காகச் செலவு செய்யப்பட்ட தொகைக்கு வரி விலக்கு அளிக்கும் என்பது பல கோடி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது வேலைவாய்ப்புகள் தான், படித்த பல கோடி இளைஞர்கள் இன்றும் சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையை மாற்றி அதிகப்படியான வேலைவாய்ப்புகளை அனைத்து துறையிலும் உருவாக்கும் போது மக்களின் வாழ்வியல், வருமானம், வர்த்தகம் அதிகரிக்கும்.
விலைவாசி
இந்தியாவில் தற்போது விவசாயப் பொருட்கள் முதல் உற்பத்தி பொருட்கள் வரையில் அனைத்தும் அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக உணவு பொருட்களின் விலையில் இந்தியாவில் முழுவதும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதை விரைவாகக் குறைக்க மத்திய அரசு வழிவகைச் செய்ய வேண்டும்.