இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கும் வேளையில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது.
இந்தப் பண்டிகை காலத்தில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பிடிக்க அனைத்து நிறுவனங்களும் திட்டமிட்டு இருக்கும் காரணத்தால், பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவிக்கத் தயாராகி வருகிறது.
இதற்கிடையில் கொரோனாவுக்குப் பின்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைக்குச் சீரடைந்த பின்பு மிகப்பெரிய பண்டிகை காலம் என்பதால் மக்களிடமும் சரி, நிறுவனங்களிடமும் சரி அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனால் டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் போன்றவற்றை வாங்கத் திட்டமிடுவோர் காத்திருந்து பண்டிகை காலத் தள்ளுபடியில் வாங்கினால் அதிகப்படியான பணத்தைச் சேமிக்க முடியும்.
பண்டிகைக் காலம்
இந்தப் பண்டிகைக் காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வாங்கத் திட்டமிடுவோர் எந்தப் பிராண்ட் அதிகமாகத் தள்ளுபடிகள், ஆஃபர்களையும், விளம்பரங்கள் செய்கிறது எனக் குழம்பிப்போகும் அளவிற்குப் போட்டிகள் உருவாகியுள்ளது.
இரண்டு ஆண்டு
கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்பத்தி மற்றும் விநியோகம் சவாலாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் மந்தமாக இருக்கும் வர்த்தகத்தை மேம்படுத்த வர்த்தகத்தை அதிகரிக்க அதிகத் தள்ளுபடி, விளம்பரங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது.
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்
இதே நேரத்தில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அடுத்தக் காலாண்டில் 5G சேவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக 5G மாடல்களை அறிமுகம் செய்ய வேண்டும், இதற்கு முன்பு மலையாய் குவிந்துக்கிடக்கும் 4G ஸ்மார்ட்போன்களை முழுமையாகத் தீர்க்க வேண்டும். இதனால் இந்தப் பண்டிகை காலத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
700 கோடி ரூபாய்
ரியல் மி நிறுவனம் இந்த ஆண்டுத் தள்ளுபடிக்காகச் சுமார் 700 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவழிக்கத் திட்டமிட்டு உள்ளது, கடந்த ஆண்டு 500 கோடி ரூபாயை செலவிட்டது. இதேபோல் சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்களும் அதிகப்படியான தொகையைத் தள்ளுபடிக்காகச் செலவழிக்க உள்ளது.
Haier, எல்ஜி
இதேபோல் Haier இந்தப் பண்டிகை காலத்தில் விளம்பரம், ப்ரோமோஷன், தள்ளுபடிக்காக 100 கோடி ரூபாயும், எல்ஜி இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் 20-25 சதவீதம் அதிகமாகச் செலவு செய்ய முடிவு செய்துள்ளது.
மக்களே உஷார்
இப்படி இந்தியாவில் இந்தப் பண்டிகை காலத்தில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் தள்ளுபடிகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் பண்டிகை கால விற்பனை துவங்கிய பின்னர் டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் போன்றவற்றை வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்.