இந்தியாவில் வங்கிக் கணக்குகளை வைத்துக்கொண்டு வெளிநாட்டில் வசிக்கும் என்ஆர்ஐ -கள், தங்கள் சர்வதேச மொபைல் எண்களுடன் இனி மிகவும் எளிதான முறையில் டிஜிட்டல் முறையில் பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும்.
இந்தியாவில் யூபிஐ சேவை பயன்பாட்டுக்கு வந்த பின்பு எண்ணில் அடங்கா வாய்ப்புகளையும், சேவை தளங்களையும் உருவாக்கியுள்ளது. இதில் ஒரு உச்சத்தைத் தான் NPCI அமைப்பு விரைவில் தொடர உள்ளது.
NPCI அமைப்பின் இப்புதிய முயற்சி உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்களுக்குப் பெரு வாய்ப்பாக மாறப் போகிறது.
யுபிஐ தளம்
யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் எனப்படும் யுபிஐ தளத்தின் வாயிலாக விரைவில் NRI-கள் பயன்படுத்த முடியும். இந்தியாவில் வங்கிக் கணக்கை வைத்துக்கொண்டு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அந்நாட்டில் பயன்படுத்தும் மொபைல் நம்பர் வைத்துக்கொண்டே இந்தியாவில் நிதி பரிமாற்றத்தைச் செய்ய முடியும்.
10 நாடுகள்
இப்புதிய முயற்சியின் கீழ் முதல் கட்டமாகச் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய 10 நாடுகளின் குறியீடுகளைக் கொண்ட மொபைல் எண்களிலிருந்து யூபிஐ தளத்தில் இணைந்து பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.
மொபைல் எண்
ஜனவரி 10 ஆம் தேதி NPCI அமைப்பு வெளியிடப்பட அறிக்கையின் படி சிங்கப்பூர் - +65, ஆஸ்திரேலியா - +61, கனடா - +1, ஹாங்காங் - +852, ஓமன் - +968, கத்தார் - +974, அமெரிக்கா - +1, சவுதி அரேபியா - +966 தத்தம் நாடுகளில் இந்தக் குறியீடு கொண்ட எண்-ஐ யூபிஐ தளத்தில் இணைக்க அனுமதி அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
NRE அல்லது NRO கணக்குகள்
சர்வதேச மொபைல் எண்களைக் கொண்ட NRE அல்லது NRO கணக்குதாரர்கள் கீழே உள்ள 2 நிபந்தனைகள் பூர்த்திச் செய்யப்பட்டால் மட்டுமே UPI தளத்தில் இணைந்து பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
FEMA விதிமுறைகள்
யூபிஐ தளத்தில் பணப் பரிவர்த்தனை செய்ய விரும்பும் என்ஆர்ஐகள் NRE அல்லது NRO கணக்குகள் உடன் தங்களது வெளிநாட்டு எண்-ஐ இணைத்திருப்பது மட்டும் அல்லாமல் FEMA (அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம்) விதிமுறைகளின்படி மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை துறைகளால் அவ்வப்போது வழங்கப்படும் வழிகாட்டுதல்கள்/அறிவுரைகளையும் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்பதை அடிப்படை விதிமுறையாக வைத்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு நிதி உதவி
இதோடு பணமோசடி தடுப்பு / பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்வதை எதிர்த்துப் போராடுவது மற்றும் விதிகளின்படி பல்வேறு பாதுகாப்புச் சரிபார்ப்பு ஆகியவை பணம் அனுப்புபவர் மற்றும் பயனாளி வங்கிகளால் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை NPCI உறுதி செய்யும்.
ஏப்ரல் 30, 2023
இந்த நிலையில் யூபிஐ தளத்தில் சேர விரும்பும் 10 நாடுகளில் இருக்கும் NRI-கள் இந்த விதிமுறை கீழ் இணங்கப்பட்டு உள்ளீர்களா என்பதை ஏப்ரல் 30, 2023க்குள் சரிபார்க்க வேண்டும் என NPCI வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.