இந்திய ஆட்டொமொபைல் துறை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வருவது கண் முன்னே தெரியும் நிலையில், இந்தியாவில் வேகமாக வளரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் பிற நிறுவனங்களைக் காட்டிலும் மிகப்பெரிய வர்த்தகத்தை அடைய வேண்டும் என்பதற்காக டாடா மோட்டார்ஸ் மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டியுள்ளது.
எப்போதும் வெளி சந்தையில் இருந்து முதலீட்டை திரட்டாத டாடா முதல் முறையாகத் தனது எலக்ட்ரிக் வாகன பிரிவு பங்குகளை விற்பனை செய்து 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்ட ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில் அடுத்தக் கட்டமாக டாடா மோட்டார்ஸ் பெரும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சமீபத்தில் நிர்வாகச் சீரமைப்பு நடந்தது அனைவருக்கும் தெரியும், வர்த்தக வாகனங்கள் பிரிவையும், பயணிகளை வாகன பிரிவையும் தனியாகப் பிரிந்தது டாடா மோட்டார்ஸ் கீழ் கிளை நிறுவனமாக அறிவித்தது.
எலக்ட்ரிக் வாகனம்
இதன் பின்பு முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் பயணிகள் வாகன பிரிவில் இருந்து எலக்ட்ரிக் வாகன பிரிவை தனியாகப் பிரித்து மற்றொரு கிளை நிறுவனத்தை உருவாக்கும் பணியைச் செய்து வருகிறது.
நஷ்டம்
இந்நிலையில் பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்கும் டாடா மோட்டார்ஸ்-ன் பயணிகள் வாகன பிரிவில் இந்த வருடம் அதிகளவிலான நிதி உட்செலுத்தப்பட்ட நிலையில், வர்த்தகச் சந்தையில் மீண்டும் வர்த்தகத்தைப் பெற துவங்கியுள்ளது.
டெஸ்லா உடன் போட்டி
இந்தச் சூழ்நிலையில் டாடா மோட்டார்ஸ் அடுத்த 4 வருடத்தில் இந்தியாவுக்கு வரும் டெஸ்லா நிறுவனத்துடன் நேரடியாக வர்த்தக ரீதியில் போட்டிப்போட 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதற்காகத் தற்போது 2 பில்லியன் டாலர் அதாவது 15,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை முதலீடு செய்ய உள்ளது.
அமெரிக்காவின் TPG
அமெரிக்க TPG-யின் 1 பில்லியன் டாலர் முதலீட்டு அறிவிப்பில் டாடா மோட்டார்ஸ்-ன் பயணிகள் வாகன பிரிவின் மதிப்பு 9.1 பில்லியன் டாலர் வரையில் மதிப்பிடப்பட்ட நிலையில், அடுத்த 4 வருடத்தில் புதிய கார்களின் அறிமுகத்தின் மூலம் 20 சதவீத விற்பனையைக் கிரீன் எனர்ஜி வாகனங்கள் வாயிலாகப் பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக இப்பிரிவின் தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
நெக்சான் மற்றும் டிகார்
தற்போது டாடா அறிமுகம் செய்துள்ள நெக்சான் மற்றும் டிகார் ஆகிய இரு மாடல்களின் கீழ் எலக்டரிக் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இவ்விரு மாடலில் மட்டும் மாதம் 3000 முதல் 3500 புக்கிங் கிடைப்பதாகவும், ஆனால் 1000 கார்கள் மட்டுமே டெலிவரி செய்ய முடியும் நிலையும் உள்ளது.
15,000 கோடி ரூபாய் முதலீடு
இவ்விரு மாடல் கார்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிதாக அறிமுகம் செய்யும் 10 மாடல் கார்களுக்காகவும் 15,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பயன்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இன்னமும் எலக்ட்ரிக் வாகன பிரிவுக்குள் முழு வீச்சாக இறங்காத நிலையில் டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி
இந்தியா எப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது அனைத்து துறையிலும் வேகமாக வளர்ந்து வருகிறது என்றால் மிகையில்லை. ஒருப்பக்கம் அதிகமானோருக்குக் கிடைத்த கல்வி, வாய்ப்புகள் மூலம் இந்தியாவின் உழைக்கும் சமுகத்தைக் காட்டிலும் தொழில் துவங்குவோர் எண்ணிக்கையில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சி முதலீட்டு சந்தையைப் பெரிய அளவில் விரிவாக்கம் அடைய செய்துள்ளது.
மக்கள் மத்தியில் மாற்றம்
இதன் மூலம் மக்கள் மத்தியிலும் அதிகளவிலான பணப்புழக்கம் அதிகரித்து வர்த்தகச் சந்தையிலும் விரிவாக்கம் அடைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய பொருட்களைப் பெறவும் பயன்படுத்தவும் மக்கள் மத்தியிலான ஆர்வம் அதிகரித்துள்ளது.
டெஸ்லாவுக்குக் கிராக்கி
இந்த மாற்றம் தான் எலக்ட்ரிக் கார் போன்றவற்றின் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் இந்தியாவில் டெஸ்லா கார் விலை குறைவாக அறிமுகம் செய்தால், அந்த வருடத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் நிறுவனம் டெஸ்லா-வாகத் தான் இருக்கும்.