இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்கனவே கடுமையான வர்த்தகப் பிரச்சனையைச் சந்தித்து வரும் டெலிகாம் நிறுவனங்களுக்கு AGR கட்டணம் மிகப்பெரிய சுமையாக இருந்தது. பல மாதங்களாக இதுகுறித்து வழக்கு நடந்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட் டெலிகாம் நிறுவனங்கள் வைத்திருக்கும் AGR நிலுவைத் தொகையை வருடம் 10 சதவீதம் என்ற வகையில் அடுத்த 10 வருடத்திற்குள் முழுமையாகச் செலுத்தி விட வேண்டும் என உத்தரவிட்டது.
வோடபோன்-ஐடியா நிறுவனம் தனது AGR கட்டண நிலுவையில் ஏற்கனவே 7,854 கோடி ரூபாய் செலுத்திவிட்ட நிலையில், இன்னும் 58,254 கோடி ரூபாய் அளவிலான தொகையை நிலுவை வைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி மீதமுள்ள 58,254 கோடி ரூபாய் தொகையை வருடம் 10 சதவீதம் செலுத்த வோடபோன்-ஐடியா ஒப்புக்கொண்டுள்ளது.
இதன் எதிரொலியாகக் கடந்த 3 நாள் வர்த்தகத்தில் வோடபோன்-ஐடியா நிறுவனப் பங்குகள் சுமார் 51 சதவீதம் வளர்ச்சி அடைந்து பெரிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி வோடபோன்-ஐடியா நிர்வாகம் முக்கியமான முடிவை எடுத்த திட்டமிட்டுள்ளது.
52 வார உயர்வு
ஜியோ அறிமுகத்திற்குப் பின் வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பு அடைந்து வருவாய் மற்றும் லாப அளவீடுகள் சரிந்தது. இதுமட்டும் அல்லாமல் வர்த்தகக் குறைவாக இருக்கும் பல சேவைகளையும், நிறுவனங்களையும் மூடியது. இதோடு பல ஆயிரம் ஊழியர்களைச் செலவின குறிப்பிற்காகப் பணிநீக்கம் செய்தது.
இந்த மோசமான நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் மூலம் வோடபோன்-ஐடியா நிறுவனப் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 13.45 ரூபாய் வரையில் 52 வார உயர்வை அடைந்தது.
புதிய முடிவு
AGR கட்டண பிரச்சனைக்குத் தீர்வு கண்ட நிலையில் வோடபோன்-ஐடியா நிர்வாகம் மீண்டும் வர்த்தகச் சந்தையில் சிறப்பான இயங்க வேண்டும் என்பதற்காக முக்கிய முடிவுகளை எடுக்க வோடபோன்-ஐடியா நிர்வாகம் கூட்டம் நடத்தியுள்ளது.
இக்கூட்டத்தில் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் வளர்ச்சிக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளும், AGR நிலுவை கட்டணத்தைத் தொடர்ந்து செலுத்தவும் வழிவகைச் செய்ய ஆலோசனை செய்யப்பட்டது.
முதலீடு
வோடபோன்-ஐடியா தற்போது இருக்கும் நிலையில் முக்கியத் தேவையாக இருப்பது முதலீடு தான். எனவே வோடபோன்-ஐடியா நிர்வாகக் கூட்டத்தில் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பங்குகளை எப்படி விற்பனை செய்வது, எந்த வழியில் விற்பனை செய்வது, எத்தனை பகுதிகளாக விற்பனை செய்வது போன்ற முக்கியமான விஷயங்களை இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
பங்கு வளர்ச்சி
செப்டம்பர் 1ஆம் தேதி 8.89 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட வோடபோன்-ஐடியா பங்குகள் கடந்த 3 நாட்களில் 51.29 சதவீதம் வளர்ச்சி அடைந்து 12.15 ரூபாய் விலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தது.
மேலும் வோடபோன்-ஐடியா பங்குகள கடந்த ஒரு வாரத்தில் 24 சதவீதமும், ஒரு மாதத்தில் 45 சதவீதமும், 2020ல் 103 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் மூலம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 36,005 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
திட்டம்
வோடபோன்-ஐடியா நிர்வாகக் கூட்டத்தில் முதலீடு திரட்ட நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், திரட்டப்படும் முதலீட்டை AGR கட்டணத்தைச் செலுத்தவும், வர்த்தக விரிவாக்கத்திற்காக நெட்வொர்க்-ல் முதலீடு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
4 பில்லியன் டாலர்
ஜியோ நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து குவிந்து வந்த போது வோடபோன்-ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்யச் சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டியது, ஆனால் முதலீடு செய்யப்படவில்லை.
தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்குப் பின், வோடபோன்-ஐடியா நிறுவனத்தில் அமேசான் மற்றும் வெரிசோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 4 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் அதை மறுத்துள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம்.