இந்தியாவில் கொரோனா தாக்குதல் மார்டன் ரீடைல் வர்த்தகத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையில்லை. 2000ஆம் ஆண்டுத் துவக்கத்தில் தெருக் கடைகளில் இருந்த பல நிறுவனங்கள் வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், உயர் மட்ட வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் ஆடம்பர கட்டிடங்கள், கண்ணாடி மாளிகைகளாக இருக்கும் மால்களுக்குள் நுழைந்தது.
ஆனால் இன்று பல முன்னணி நிறுவனங்களே வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள மால்களில் இருந்து தெருக்களுக்கு வந்து விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலை மால் வர்த்தகத்தையும் அதைச் சார்ந்துள்ள வர்த்தகம் அனைத்தையும் மாற்ற உள்ளது.
பெரும் நிறுவனங்கள்
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி McDonald's, Speciality Restaurants, deGustibus, Lite Bite FoodS போன்ற முன்னணி துரித உணவு நிறுவனங்களும், மேலும் பல முன்னணி உணவகங்களும் குறிப்பிட்ட சதவீத கடைகளை மால்களை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.
இந்தத் திடீர் முடிவுக்கு என்ன காரணமாக இருக்கும்..? வாங்கப் பார்ப்போம்..!!
என்ன காரணம்..??
முதலில் தெருக் கடைகள் என்பது தள்ளுவண்டிக் கடைகள் கிடையாது, சாதாரணமாக இருக்கும் கடைகள் தான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரிய பிராண்ட் கடைகள் மால்களை விட்டு வெளியேறுவதற்கு 3 முக்கியக் காரணங்கள் உள்ளது.
1. மால்களில் இருக்கும் கடைகளுக்கு முன்பாகவே இந்தச் சாதாரணக் கடைகள் திறக்கப்படலாம். இது அதிக வர்த்தகத்தையும் வருமானத்தைத் தரும்.
2. லாக்டவுன் முடிந்தாலும் மால்களில் தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால், மால் திறக்கும் நேரத்தில் அதிகளவிலான கட்டுப்பாடுகள் இருக்கும். இதேபோல் மால்களுக்குள் வாடிக்கையாளர்கள் வரும் எண்ணிக்கையும் குறைவாகத் தான் இருக்கும்.
3. வாடகை அளவுகள் குறைவு.
புதிய மாற்றங்கள்
மேலும் quick-service restaurant பிரிவில் இருக்கும் பல உணவு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருப்பது போல் சில இடங்களில் மட்டும் drive-through சேவைகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதேபோல் வாடிக்கையாளர்களுக்கு உட்கார்ந்து சாப்பிடும் சேவையைக் குறைத்துவிட்டு டேக் அவே மற்றும் ஆன்லைன் ஆர்டர் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அதில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தவும் முடிவு செய்துள்ளது.
உணவு சந்தை
இந்தியாவில் டாப் 8 நகரங்களில் மட்டும் 126 மால்கள் உள்ளது. இதில் கடை வைப்பதற்கு அதிக வாடகை ஒருபக்கம் கொடுத்தாலும், மறுபக்கம் மால் மெயின்டனென்ஸ் தொகை கொடுக்க வேண்டி உள்ளது. இது மால்களில் இருக்கும் கடைகளுக்குப் பெரும் சுமை.
மேலும் பல கடைகள் தற்போது வாடகை குறைக்கவும், மெயின்டனென்ஸ் தொகை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் எனவும் மால் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.
4.2 லட்சம் கோடி
கொரோனா பாதிப்பால் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்ட முக்கியமான ஒரு துறையில் உணவுகள் சந்தை தான். இத்துறையின் மதிப்பு 4.2 லட்சம் கோடி ரூபாய்.
லாக்டவுன் 4.0 மூலம் தற்போது வெறும் 30 முதல் 40 சதவீத உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் 2020-21ஆம் நிதியாண்டில் இத்துறை அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.