உலகம் முழுவதும் நடக்கும் டெக் ஊழியர்களின் பணிநீக்கம் குறித்துத் தான் வேலைவாய்ப்புச் சந்தையில் முக்கியமான விவாத பொருளாக உள்ளது.
பணம் பலம் கொண்ட கூகுள், மைக்ரோசாப்ட், உபர், ஆப்பிள், டெஸ்லா மற்றும் மெட்டா போன்ற பெரிய பெரிய நிறுவனங்களே செலவுகளைக் குறைக்கத் தங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கின்றன.
ஆனால், உண்மையில் இது மட்டும் காரணம் இல்லை என்பது தான் தற்போது தெரிய வந்துள்ள உண்மை.
என்ன நடக்கிறது?
கூகுள், மைக்ரோசாப்ட், உபர், ஆப்பிள், டெஸ்லா மற்றும் மெட்டா போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் கடினமான காலங்களை எதிர்கொள்கின்றன. பெரு நிறுவனங்களின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
ஊழியர்கள் பணிநீக்கம்
கூகிள் அடுத்த காலாண்டு முடிவுகள் சிறப்பாக இல்லையென்றால் கட்டாயம் நிறுவனத்தில் பணிநீக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என ஊழியர்களை எச்சரித்துள்ளது.
ஆப்பிள், புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்குப் பொறுப்பான சுமார் 100 ஒப்பந்த அடிப்படையிலான ரெக்யூட்டர்களைப் பணிநீக்கம் செய்தது.
ட்விட்டர் தனது பணியமர்த்தல் செயல்முறையை FY22 இன் இரண்டாவது காலாண்டில் கணிசமாகக் குறைத்தது.
மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் இருந்து 200 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது.
சுமார் 200 ஆட்டோபைலட் தொழிலாளர்களை டெஸ்லா விடுவிக்கிறது.
பணிநீக்கம் ஏன் நடக்கின்றன?
அனைத்திற்கும் காரணம் பணம் மட்டுமே. உலகளவில் பெரிய நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்-ன் லாபம் Q2FY22 இல் $16 பில்லியனுக்கு அருகில் இருந்தது, முந்தைய ஆண்டு இதே காலத்தில் $18.5 பில்லியனாக இருந்தது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இரண்டாவது காலாண்டில் அதன் முதல் வருடாந்திர வருவாய் சரிவை அறிவித்து, 1% சரிவை எதிர்கொண்டு 28.8 பில்லியன் டாலராக அறிவித்தது. இந்நிறுவனத்தின் லாபம் 36% குறைந்து 6.7 பில்லியன் டாலராக உள்ளது.
மைக்ரோசாப்ட் எதிர்பார்ப்புகளையும் தவறவிட்டு 51.9 பில்லியன் வருவாயை ஈட்டியது, இது கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த வருவாய் வளர்ச்சியாகும்.
செலவு குறைப்பு
பெரிய டெக் நிறுவனங்களின் வருவாய் குறைந்த நிலையில் செலவுகளைக் குறைப்பதற்காக இந்தப் பணி நீக்கம் செய்யப்படுகிறது என்பது தான் அனைத்து நிறுவனங்களும் கூறும் முக்கியக் காரணமாக உள்ளது. ஆனால் உண்மையில் இந்தப் பணிநீக்கத்திற்குப் பின்பு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.
அமெரிக்கப் பெடரல் வங்கி
அமெரிக்கப் பெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த போராடி வருவது நாம் அனைவருக்கும் தெரியும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பணப் புழக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் அமெரிக்கச் சந்தையில் பொருளாதார மற்றும் வர்த்தக மந்தநிலை உருவாகும் என அனைவருக்கும் தெரியும்.
பெரிய நிறுவனங்கள்
பொதுவாகப் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் கையில் பல நூறு கோடி பணம் இருந்தாலும், வட்டி விகிதம் குறைவாக இருக்கும் காரணத்தால் விரிவாக்கத் திட்டத்திற்கு, நிறுவனங்களைக் கைப்பற்றுவதற்கு என அனைத்திற்கும் வங்கிகளிடம் இருந்து தான் கடன் பெறும்.
அதிக வட்டி
தற்போது வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் வாங்கிய கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டும், அதேவேளையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அனைத்து சேவை மற்றும் பொருட்களுக்கு அதிக விலை கொடுத்துப் பெற வேண்டும். இதனால் செலவுகளும் அதிகமாகும்.
இக்கட்டான சூழ்நிலை
அமெரிக்கச் சந்தையில் பொருளாதார மற்றும் வர்த்தக மந்தநிலை உருவாகும் பட்சத்தில் வருமானமும் குறையும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் பெரிய டெக் சேவை நிறுவனங்களும் வேறு வழியில்லாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைப் பெரிய அளவில் குறைத்துள்ளது.
திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை
ManpowerGroup நடத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது இந்திய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.
இந்தியா ஐடி ஊழியர்கள்
செலவுகளைக் குறைக்கத் திட்டமிடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் போதுமான ஊழியர்களைக் குறைவான சம்பளத்தில் கொடுக்க இந்திய ஐடி சேவை நிறுவனத்தால் முடியும் என்பதால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்தியா ஐடி நிறுவனங்களுக்கு ராஜயோகம் எனக் கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications