பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் போதே கருப்புப் பணத்தை ஒழிப்பதாக அறிவித்துத் தான் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தார்.
இதைத் தொடர்ந்த சிவிஸ் வங்கியில் இருந்து இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்களை வாங்கி விசாரணை செய்து வந்த நிலையில், உள்நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகப் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது.
இந்தப் பணமதிப்பிழப்பு பெரும் தோல்வி அடைந்த நிலையில் இந்தியாவை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் முயற்சியில் இறங்கியது. ஆனால் தற்போது இரண்டு முயற்சிகளுமே தோல்வியைச் சந்தித்துள்ளது, டிஜிட்டல் பொருளாதாரம் பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டாலும் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டு-கள் எண்ணிக்கை வரலாற்று உச்சத்தில் உள்ளது, இதேவேளையில் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் பல வருட உச்சத்தைச் சமீபத்தில் தொட்டு உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசுக்குக் கருப்புப் பணத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது.
சுவிஸ்
சுவிஸ் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு மத்திய அரசின் கருப்புப் பணத்திற்கு எதிரான போராட்டத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசு இதுவரை பெற முடியாத பல முக்கியமான கணக்குகளின் தரவுகளைப் பெற முடியும்.
ரகசிய வெளிநாட்டு டிரஸ்ட், வங்கி கணக்கு
இந்தத் தீர்ப்பில் சுவிஸ் நாட்டின் இந்தியர்கள் வைத்திருக்கும் ரகசிய வெளிநாட்டு டிரஸ்ட் மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து அக்கணக்கின் அல்டிமேட் பெனிபிஷியரிஸ் எவ்விதமான பணத்தையும் பெறவில்லை என்றாலும் பணத்தின் விபரங்கள், கணக்கின் விபரங்கள், கணக்கின் உரிமையாளர் விபரங்கள் ஆகியவை இந்தியாவிடம் பகிரலாம் என அறிவித்துள்ளது.
பணக்கார இந்தியர்கள்
சுவிஸ் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு பல பணக்கார இந்தியர்களுக்கு வேர்க்க, விறுவிறுக்க வைத்துள்ளது. விரைவில் இந்தத் தரவுகள் வருமான வரித்துறை சுவிஸ் மத்திய வங்கிகளில் இருந்து பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளக்கம்
இந்த வழக்கின் விசாரணையில் பணக்கார இந்தியர்களால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில், இதுபோன்ற தனிப்பட்ட நிதித் தகவல்களுக்கும் இந்திய வரி அலுவலகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டனர், ஏனெனில் வெளிநாட்டு அறக்கட்டளைகளின் நிதி விநியோகம் இல்லாத நிலையில் பயனாளிகளுக்கு வரி விதிக்க முடியாது என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.
2 வார வாதம்
கடந்த இரண்டு வாரங்களாகச் சுவிஸ் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் பல கோணத்தில் வாதங்கள் வைக்கப்பட்டது. இதில் முக்கியமாக இந்திய அரசு ஏன் தகவல்களைக் கோரியுள்ளனர் மற்றும் அத்தகைய தரவுகளின் பின்னணியில் அவர்கள் வரி கோர முடியுமா என்பது குறித்துத் தீர்ப்பை அளிக்க முடியாது என்று சுவிஸ் நாட்டின் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
வர்த்தகக் குழுமங்கள்
இந்தத் தீர்ப்பின் மூலம் இந்தியாவின் பல முன்னணி வர்த்தகக் குழுமங்கள் வைத்திருக்கும் டிரஸ்ட் மற்றும் வங்கி கணக்குகள் குறித்த தரவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரித்துறைக்கு அடுத்த வேட்டை ஆரம்பம்.