இந்தியாவின் முன்னணி ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை தளமான பிக்பேஸ்கட் நிறுவனத்தில் சைபர் அட்டாக் நடந்துள்ளது. இதனால் பிக்பேஸ்கட் தளத்தில் இருக்கும் சுமார் 2 கோடி வாடிக்கையாளர்களின் தகவல் திருடப்பட்டது மட்டும் அல்லாமல் தகவல்களை டார்க் வெப் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இந்தச் சம்பவத்தால் பிக்பேஸ்கட் தளத்தில் வாடிக்கையாளர்கள் பயத்தில் உள்ளனர். வாடிக்கையாளர்களின் பேமெண்ட் தகவல் முதல் பல தனிநபர் தொடர்புடைய தகவல்கள் பிக்பேஸ்கட் தளத்தில் இருக்கும் காரணத்தால் எதிர்காலப் பாதிப்புகள் குறித்த பயத்தில் உள்ளனர் பிக்பேஸ்கட் வாடிக்கையாளர்கள்.
டாடா குழுமம் பிக்பேஸ்கட் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குப் பங்குகளை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இந்தச் சூழ்நிலையில் சைபர் அட்டாக் நடந்துள்ளதால் இந்தப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2 கோடி வாடிக்கையாளர்கள்
அமெரிக்காவின் முன்னணி சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Cyble வெளியிட்டுள்ள அறிக்கையில், பிக்பேஸ்கட் நிறுவனத்தில் பெரிய அளவிலான சைபர் அட்டாக் நடந்துள்ளது. இத்தளத்தில் இருக்கும் சுமார் 2 கோடி வாடிக்கையாளர்கள் தரவுகளை டார்க் வெப் தளத்தில் துமார் 40000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முக்கியத் தகவல்கள்
பிக்பேஸ்கட் தளத்தில் இருக்கும் 2 கோடி வாடிக்கையாளர்களின் பெயர், ஈமெயில் ஐடி, password hashes, பின், மொபைல் எண், முகவரி, பிறந்த தேதி, லெகேஷன், லாக்இன் ஐபி முகவரி எனப் பல முக்கியமான தரவுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக Cyble நிறுவனம் தெரிவித்துள்ளது.
புகார்
இதைத் தொடர்ந்து பிக்பேஸ்கட் நிறுவனம் பெங்களூரூ சைபர் க்ரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இந்தத் தகவல் திருட்டு குறித்து ஆய்வு செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது.
Cyble நிறுவனத்தின் தகவல் படி ஏற்கனவே பிக்பேஸ்கட் தளத்தில் தகவல் 40,000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் தகவல் திருட்டு உறுதியாகியுள்ளது.
நிதியியல் தகவல்கள்
இந்நிலையில் இந்தச் சைபர் அட்டாக் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்கள் நிதியியல் தரவுகளும் அதாவது கிரெடிட் கார்டு தரவுகள் போன்றவற்றை நாங்கள் சேமிப்பது இல்லை. இதனால் பிக்பேஸ்கட் வாடிக்கையாளர்கள் தொடர்புடைய நிதியியல் தகவல்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என விளக்கம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 14
இந்தச் சைபர் அட்டாக் பிக்பேஸ்கட் தளத்தில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்று உள்ளதாகவும், நவம்பர் 1ஆம் இதை இந்நிறுவனத்திற்குத் தெரிவித்ததாகவும் Cyble நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகம் நம் வாழ்க்கையை எளிதாக்கும் அதேவேளையில் பல ஆபத்துகளைக் கொண்டு வருகிறது.