இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது, ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவைகளைத் தாண்டி பின்டெக், டிஜிட்டல் நிதியியல் சேவை மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டில் உலகளவில் பிரபலமான பல இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது அடுத்தடுத்த சைபர் அட்டாக் நிகழ்ந்துள்ளது.
ஆய்வறிக்கை
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மற்றும் SME நிறுவனங்கள் அதிகளவிலான சைபர் அட்டாக்-கிற்கு அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது என் சைபர்பீஸ் பவுண்டேஷன் ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் அனைத்து முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் வாடிக்கையாளர் மற்றும் நிறுவன தகவல்களைப் பாதுகாக்கக் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நேஷனல் சைபர் செக்யூரிட்டி
இந்தியாவில் தினமும் 4 லட்சம் மால்வேர்கள் கண்டுபிடிக்கப்படுகிறது, 375 சைபர் ஆட்டாக்குகள் நிகழ்கிறது என நேஷனல் சைபர் செக்யூரிட்டி பிரிவின் அதிகாரி ராஜேஷ் பன்ட் தெரிவித்துள்ளார். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவிலான சைபர் ஆட்டாக்குகளை எதிர்கொள்ளும் நிலையில்
இந்நிலையில் இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இணைந்து ரோபஸ்ட் சைபர் செக்யூரிட்டி சிஸ்டம் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வையிட்ஹேட்ஜூனியர்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கல்வி நிறுவனமான (ஸ்டார்ட்அப்) WhiteHatJr நிறுவனத்தின் பேக் எண்ட் சர்வரில் பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 2.80 லட்சம் மாணவர்களின் பெயர், வயது, பாலினம், புகைப்படம், யூசர் ஐடி, பெற்றோர்களின் பெயர் மற்றும் அவர்களின் திறன் அட்டை ஆகிய அனைத்து தகவல்களும் சைபர் அட்டாக் அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஆனால் பிரச்சனையை 24 மணிநேரத்தில் கண்டுபிடித்துச் சரி செய்யப்பட்ட காரணத்தால் எவ்விதமான தகவல்களும் லீக் ஆகவில்லை என வையிட்ஹேட்ஜூனியர் தெரிவித்துள்ளது.
பிக்பேஸ்கட்
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் மளிகை பொருள் விற்பனை நிறுவனமான பிக்பேஸ்கட் தளத்தில் இருக்கும் சுமார் 2 கோடி வாடிக்கையாளர்கள் தரவுகளை டார்க் வெப் தளத்தில் சுமார் 40,000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
பிக்பேஸ்கட் தளத்தில் இருக்கும் 2 கோடி வாடிக்கையாளர்களின் பெயர், ஈமெயில் ஐடி, password hashes, பின், மொபைல் எண், முகவரி, பிறந்த தேதி, லெகேஷன், லாக்இன் ஐபி முகவரி எனப் பல முக்கியமான தரவுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக Cyble நிறுவனம் தெரிவித்துள்ளது.
டன்சோ
இந்தியாவில் பெரு நகரங்களில் மட்டும் வர்த்தகம் செய்து வரும் ஹைப்பர் லோக்கல் டெலிவரி ஸ்டார்ட்அப் நிறுவனமான டன்சோ 2020ஆம் ஆண்டில் ஜூலை மாதம் சைபர் அட்டாக் எதிர்கொண்டது.
இதன் மூலம் டன்சோ-வின் 34 லட்சம் வாடிக்கையாளர்களின் போன் நம்பர், ஈமெயில் ஐடி ஆகிய தகவல்கள் திருடப்பட்டது.
அன்அகாடமி
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான அன்அகாடமி ஜனவரி மாதம் சைபர் அட்டாக் எதிர்கொண்டு சுமார் 2.2 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளது.
Edureka
இதேபோல் மற்றொரு ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான Edureka செப்டம்பர் மாதம் சைபர் அட்டாக் எதிர்கொண்டு சுமார் 20 லட்ச வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது.
நிதியியல் தரவுகள்
இந்த வருடம் சைபர் அட்டாக் எதிர்கொள்ளும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் நிதியியல் டேட்டா அதாவது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தரவுகளைச் சேமிக்காத காரணத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை.
டிஜிட்டல் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் டிஜிட்டல் சேவை அளிக்கும் அனைத்து நிறுவனங்களும் சைபர் அட்டாக்-ல் இருந்து தப்பிக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.