கொரோனா பாதிப்பால் பல லட்சம் மக்கள் இருப்பிடத்தை விட்டு மாநிலம் மாநிலமாக நடந்து சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், பல கோடி மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தவித்து வரும் நிலையில், இந்திய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் எந்த மாநிலத்தில் அதிகளவிலான வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
வேலையில்லா திண்டாட்டத்தில் சராசரி இந்திய அளவீட்டை விடவும் பீகார் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்ட அளவீடு மிகவும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறி இம்மாநில மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் கொரோனா காரணமாக மத்திய அரசு அறிவித்த லாக்டவுன் மூலம் இம்மாநிலத்தில் பல குடும்பங்கள் அடிப்படைத் தேவைகள் கூடப் பூர்த்தி செய்ய முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று CMIE அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது.
பீகாரில் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் CMIE அமைப்பின் ஆய்வுகள் இம்மாநில மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பீகார்
லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் அதிகளவில் வேலைவாய்ப்பின்மை இருந்த மாநிலங்களில் டாப்பு 5 இடத்தில் பீகார் மாநிலமும் ஒன்று. பொதுவாகவே பீகார் ஏழை மாநிலமாக இருக்கும் காரணத்தால் வேலைவாய்ப்பு என்பது பெரும்பாலான குடும்பங்களின் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் லாக்டவுன் காலத்தில் ஏழைமையான மாநிலத்தில் வேலைவாய்ப்புகளும் இல்லை என்பதால், இம்மாநிலத்தில் பல லட்ச குடும்பங்கள் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது என CMIE அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.
அளவீடு
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பீகார் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அளவீடு 46 சதவீதமாக இருந்தது. இதே காலகட்டத்தில் இந்தியாவில் சராசரி வேலைவாய்ப்பின்மை அளவீடு 24 சதவீதம்.
தற்போது இம்மாநிலத்தில் தேர்தல் நிகழ்ந்து வரும் விலையில் மிகவும் குறைந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை அளவீடு 12 சதவீதமாகக் குறைந்தது. ஆனால் இதேகாலகட்டத்தில் இந்தியாவின் சராசரி அளவீடு 6.7 சதவீதம்.
தொடர் உயர்வு
2018ஆம் ஆண்டில் இருந்து பீகார் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான பாதிப்பை அம்மாநிலம் மக்களும், வர்த்தகச் சந்தையும் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் சராசரி அளவீட்டை விடவும் பீகாரில் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.
மூன்றில் ஒருவர்
இதேபோல் பீகாரில் இருக்கும் 3 பேரில் ஒருவருக்குத் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. இம்மாநிலத்தில் வேலைவாய்ப்பு அளவீடு செப்டம்பர் மாத்தில் கூட வெறும் 33.8 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வாக்குறுதி
`பீகாரில் தற்போது தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மக்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளையும், குறிப்பாக அரசு பணிகளை உருவாக்க மக்களின் நீண்ட காலக் கனவுகளை நோக்கிய பயணிக்கும் வகையில் சூழ்நிலையை உருவாக்குவதாகத் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளனர். இதையே CMIE அமைப்பும் இம்மாநில வளர்ச்சிப் பாதைக்கு வலியுறுத்தியுள்ளது.