பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் ரயில்வே வேலைவாய்ப்புகளுக்குத் தேர்வு செய்யும் பணியில் குளறுபடி, முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து இரு மாநிலத்திலும் மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெறும் 40000 ரயில்வே வேலைவாய்ப்புகளுக்கு 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போராட்டம் இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை சிறிதளவில் துவங்கிய போராட்டம் தற்போது ரயில் பாதையில் போராட்டம், ரயில் பெட்டியில் கல் எறிதல், ரயில் பெட்டிகளை எரிக்கும் வரையில் தீவிரமாக மாறியுள்ளது. பல இடங்களில் மோடியின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை பற்றி மட்டும் அல்லாமல் பீகார் - உத்தர பிரதேச மாநிலத்தின் வேலைவாய்ப்பு, கல்வித் தரம் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.
உலக வங்கி தரவுகள்
உலக வங்கியின் தரவுகளை ஒப்பிடுகையில் உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தான் மிகவும் மோசமான வேலைவாய்ப்பு சந்தை உள்ளது. குறிப்பாக 15 முதல் 24 வயது வரையில் இருக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமாக உள்ளது.
LPFR குறியீடு
இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கும் இதேவேளையில் வேலைவாய்ப்பு சந்தைக்குள் வரும் இளைஞர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் LPFR குறியீடும் குறைவாகவே உள்ளது.
பிரேசில் Vs இந்தியா
உதாரணமாகப் பிரேசில் நாட்டில் LPFR அளவீடு 56.6 சதவீதம், ஆனால் இந்தியாவில் இதன் அளவு வெறும் 27.1 சதவீதம் மட்டுமே. இதேவேளையில் பிரேசில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 27.5 சதவீதம், இந்தியாவில் 23 சதவீதம். இந்த அளவீடுகள் அனைத்தும் 15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் குறித்த அளவீடுகள். மேலும் பங்களாதேஷ்-ல் வேலைவாய்ப்பின்மை அளவீடு 12.1 சதவீதம் மட்டுமே, சீனாவில் 11 சதவீதம் மட்டுமே, அமெரிக்காவில் 8.3 சதவீதம் மட்டுமே.
வேலைவாய்ப்பின்மை
மேலும் இந்தியாவில் ஊழியர்கள் பங்கேற்பு விகிதம் (Labor force participation rate - LPFR) 1992ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது. 1992 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் 47 முதல் 42 சதவீதம் வரையில் சரிந்த LPFR அளவீடு 2019ல் 27.06 ஆகக் குறைந்துள்ளது. இதேவேளையில் வேலைவாய்ப்பின்மை 16.72 சதவீதத்தில் இருந்து 23.01 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது அனைத்தும் கொரோனாவுக்கு முந்தைய தரவுகள்.
கல்வியும் வேலைவாய்ப்பும்
இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரியில் சேர்வோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் படித்த படிப்புக்கான வேலைவாய்ப்பையும், திறன் தேவை சந்தையும் இந்தியாவில் உருவாகவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
சிறிய வேலைகள்
இந்தியாவில் தற்போது பட்ட படிப்பு படித்தவர்களும் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். குறிப்பாக மத்திய அரசு மாநில அரசின் பல வேலைவாய்ப்புகளுக்கு உயர் பள்ளிக் கல்வி அல்லது இளங்கலை பட்டம் போதுமானதாக இருக்கும் காரணத்தால் விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளனது.
கல்வி - வேலைவாய்ப்பின்மை
இந்தியாவில் கல்வி அளவுகள் அதிகரிக்க அதிகரிக்க வேலைவாய்ப்பின்மையும் அதிகரிக்கிறது. உதாரணமாகப் படிக்காத அல்லது பள்ளிக் கல்வி கூட இல்லாதவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை வெறும் 1.4 சதவீதமாக இருக்கும் நிலையில், பட்டப்படிப்பு படித்தவர்கள் பிரிவில் இதன் அளவீடு 16.2 சதவீதமாக உள்ளது.
டைம் பாம்
பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் தற்போது நடந்து வரும் வேலைவாய்ப்பின்மை தொடர்பான மக்கள் போராட்டம் ஒரு டைம் பாம் போல, இது இந்தியா முழுவதும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். இதற்கு முக்கியக் காரணம் மேலே பார்க்கப்பட்ட உலக வங்கியின் ஆய்வில் ஈடுபட்ட மொத்த மக்கள் எண்ணிக்கையில் பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் மட்டும் 24.5 சதவீதம் பேர் உள்ளனர்.
பீகார் மற்றும் உத்தர பிரதேசம் கல்வி
2018-19ஆம் ஆண்டின் PLFS தரவுகள் படி பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் கல்லூரி சென்றாலும் 96 சதவீதம் பேர் மனிதநேயம், அறிவியல் மற்றும் வணிகம் போன்ற பொதுவான படிப்புகளையே தேர்வு செய்கின்றனர். ஐடி, இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற முக்கியப் படிப்புகளில் சேர்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இதேபோல் உத்தர பிரதேசத்தில் 85 சதவீதம் பேர் பொதுவான படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர்.
ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலத்தில் ஐடி, இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற முக்கியப் படிப்புகளில் சேர்வோர் எண்ணிக்கை 40 முதல் 43 சதவீதமாக உள்ளது.
இந்தியாவின் பிரச்சனை
இந்தியாவில் திறன் மற்றும் கல்வி அறிவு கொண்ட இளைஞர்கள் அதிகமாக இருக்கும் வேளையில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்க ஒவ்வொரு வருடமும் தவறி வருகிறது.
தனியார் வேலைவாய்ப்புச் சந்தையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும் அதில் கிடைக்கும் சம்பளம் நிலையற்றதாக உள்ளது. மேலும் அனைவரும் சுய தொழில் செய்யும் அளவிற்கு இந்திய மக்களின் வாழ்வாதாரம் இல்லை.
இந்தப் பிரச்சனையை மத்திய மாநில அரசுகள் இணைந்து விரைவில் சரி செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது.