மும்பை: இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர்.
ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் ஜுன்ஜுன்வாலா.
கடந்த 2018ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை புள்ளி விவரங்களின் படி, நாட்டின் 54வது பணக்காரராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருந்தவர். பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. தனது ஆப்டெக் நிறுவனத்தில் 24% பங்குகளை வைத்துள்ள ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பெரிய நிறுவனங்களிலும் முதலீடுகளை பரவலாக செய்து வருகிறார்.
வெற்றிகரமான முதலீட்டாளர்
பங்கு சந்தை என்றாலே பதறியடுத்து பலர் ஒடும் காலத்தில், அதற்கு மாறாக மிக இளம் வயதில் பங்குசந்தையில் நுழைந்து மிகக் குறைந்த முதலீட்டை பலமடங்கு பெருக்கி, வெற்றிகரமான முதலீட்டாளராக வலம் வருபவர். இன்று இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான் ராஜேஷ் ஜுன்ஜுன்வலா.
ராகேஷின் கல்வித் தகுதி
மும்பையில் பணியாற்றி வந்த வருமான வரித்துறை அதிகாரி ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலாவின் மகனாக ராகேஷ் 1960ஆம் ஆண்டு பிறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஷெகாவத் பகுதி இவரின் சொந்த ஊர். கல்வித் தகுதியில் ராகேஷ் ஒரு பட்டய கணக்காளர்.
எல்லாவற்றையும் விட, பல ஆண்டுகளுக்கு மேலாக பங்கு சந்தையில் முதலீடு செய்து, சந்தையின் ஏற்ற இறக்கத்தை மிக அருகில் இருந்து பார்த்தவர்.
பல பங்குகளில் முதலீடு
மிகச் சிறிய அளவில் டாடா டீ, சேஷ கோவா முதலான நிறுவனங்களில் இவர் செய்த முதலீடு நல்ல லாபத்தை அளித்தது. அந்த லாபத்தையும் ராகேஷ் பங்குசந்தையில் முதலீடு செய்தார். இவரது முதலீட்டிலேயே மிகவும் லாபகரமான முதலீடு என்பது டைட்டன் நிறுவனப் பங்கில் செய்த முதலீடுதான். 2002 - 2003 காலகட்டத்தில் அந்த நிறுவனப் பங்குகள், ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், இன்று அது ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் வர்த்தகமாகிக் கொண்டுள்ளது..
பல சமுதாய பணிகள்
ராகேஷ் சிறந்த முதலீட்டாளர் மட்டும் அல்ல, பல்வேறு சமுதாயப் பணிகளையும் செய்து வருபவர், கிராமப்புறத்தில் வசிக்கும் மாணவர்களுக்கான கல்வி, மற்றும் தகுதியான விளையாட்டு வீரர்களை உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு ராகேஷ் முன்னுரிமை அளித்து, அதற்கான தொண்டு நிறுவங்களுக்கு பண உதவி செய்து வருபவர்.
டாடா மோட்டார்ஸில் பங்கு
இப்படி ஒரு முதலீட்டு ஜாம்பவான், கடந்த செப்டம்பர் காலாண்டில் மற்றொரு ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 4 கோடி பங்குகளை வாங்கியுள்ளதாக பிஎஸ்இ தரவுகள் காட்டுகின்றன. பங்கு சந்தைக்கு இன்று அளித்துள்ள அறிக்கையில், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 4,00,00,000 பங்குகளை வாங்கியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை வீழ்ச்சி
இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று கிட்டதட்ட 3% வீழ்ச்சி கண்டு, 127 ரூபாயாக முடிவடைந்துள்ளது. அக்டோபர் 27 அன்று இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இரண்டாவது காலாண்டு அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காலாண்டு முடிவு எதிர்பார்ப்பு
இதற்கிடையில் கோடாக் இன்ஸ்டியூசனல் ஈக்விட்டீஸ் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவானது கடந்த ஆண்டினை காட்டிலும் 18% அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதே மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இந்த நிறுவனத்தின் லாபம் குறையலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. ஏனெனில் இந்த நிறுவனத்தின் வர்த்தக வாகன விற்பனையானது கடந்த காலண்டில் பலத்த சரிவினைக் கண்டது. இதன் காரணமாக நஷ்டம் காணலாம் என்றும் கூறியுள்ளது.
டிசம்பர் காலாண்டில் வளர்ச்சி காணலாம்
உண்மையில் கடந்த இரண்டாவது காலாண்டில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல பெருத்த அடி வாங்கின. கடந்த இரண்டு மாதங்களாக விற்பனைய் ஒரளவுக்கு கூடியிருந்தாலும், செப்டம்பர் காலாண்டில் மொத்தமாக பார்க்கும் போது நிச்சயம் சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இது அடுத்து வரும் டிசம்பர் காலாண்டில் நல்ல வளர்ச்சியினை காணலாம். விழாக்கால பருவத்தில் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.