உலக முழுவதும் கிரிப்டோகரன்சி முதலீடுகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையிலும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து இதன் மீது முதலீடு செய்யும் காரணத்தால் பிட்காயின் போன்ற முன்னணி கிரிப்டோகரன்சியின் மதிப்புக் கொரோனா காலத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இந்நிலையில் hedge funds, money manager உட்படப் பல முன்னணி பிட்காயின் முதலீட்டாளர்கள் தற்போதைய சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலையில் பிட்காயின் மதிப்பு அடுத்த ஒரு வருட காலத்தில் சுமார் 1,00,000 டாலரை அடையும் எனக் கணித்துள்ளனர்.
இந்தப் புதிய கணிப்பால் முதலீட்டுச் சந்தையில் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிட்காயின் மதிப்பு
நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலையின் எதிரொலியாகவே பிட்காயின் மீது அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது. சீன சந்தை கொரோனா காரணமாகவும், உலக நாடுகள் சீனா மீது விதிக்கப்பட்டு வரும் வர்த்தகத் தடையின் காரணமாகவும் சீனாவின் நாணய மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
அமெரிக்கா டாலர்
சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்கனவே அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில், கொரோனாவுக்கான மருந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் மருந்து வாங்குவதற்காகவும், விநியோகம் செய்யப்படுவதற்கு அதிகளவிலான தொகை செலவிட வேண்டியுள்ளது. இதேபோல் தடுப்பூசி போடப்படும் போது வர்த்தகச் சந்தை மந்தம் அடையும்.
இதன் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு 20 சதவீதம் வரையில் சரியும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
மாற்று நாணயம்
உலகின் 2 பெரிய பொருளாதார நாடுகள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டுச் சந்தை தேடிச் செல்ல துவங்கியுள்ளனர்.
இதேபோல் பல நாடுகளும், நிறுவனங்களும் கிரிப்டோகரன்சி பயன்பாட்டை முறைப்படுத்த முயற்சி செய்து வரும் நிலையில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
நவம்பர் மாதம்
நவம்பர் மாதத்தின் முதல் வார முடிவில் 15,000 டாலராக இருந்த பிட்காயின் வெறும் 12 நாட்களில் 18,000 டாலரை தாண்டியது. இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 12 மணிக்கு 18,190 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட பிட்காயின் 4 மணி அளவில் 18,900 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
வரலாற்று உச்சம்
இதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் பிட்காயின் மதிப்பு 19,087 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் பிட்காயின் வரலாற்றில் 2017ஆம் ஆண்டு அதிகப்படியாக 19,665.39 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, இந்த உச்ச விலையை அடுத்த சில நாட்களில் அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வருட வளர்ச்சி
2020ல் மட்டும் பிட்காயின் மதிப்பு சுமார் 164.81 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில் பிட்காயின் அடுத்த ஒரு வருடத்தில் 1,00,000 டாலரை அடையும் என்ற கணிப்பு ஆச்சரியத்தை அளிக்கிறது.